பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தகுதியான எடையை விட சுமார் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி திடீர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னால் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தற்கு எதிராக வீராங்கனைகளுக்கு ஆதரவாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுடன் போராடினார். இதனால் பல்வேறு அடக்கு முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டார். இவர் தற்போது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில் தகுதியான எடையை விட 100 கிராம் கூடுதலாக இருக்கிறார் எனக் கூறி திடீர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்ததின் இறுதிப்போட்டியில் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் வருத்தமளிப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. இரவு முழுவதும் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்ததால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே தனது பயிற்சியாளரின் செயல்பாடுகளில் சந்தேகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்ற வினேஷ் போகத்துக்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல் எழும்பிய நிலையில் இறுதிப் போட்டிக்கு முன் திடீர் தகுதி நீக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.