facebook-round

img

வ. உ. சி. அவர்களின் 150வது பிறந்த நாளில் தேசத்தின் பொதுச் சொத்தைக் காக்க சபதம் ஏற்போம்!

இந்தியாவை அன்னிய ஏகாதிபத்தியம்  கொள்ளையடிப்பதை அனுமதியோம் என்ற முழக்கத்துடன் தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டி ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்தவர் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார்.‌

கிழக்கு இந்திய கம்பெனி தொடங்கி வணிகம் என்ற பெயரில் நாட்டிற்குள் நுழைந்த அன்னிய ஏகாதிபத்தியம், இந்தியர்களை அடிமைப்படுத்தி நாட்டைச் சூறையாடிக் கொண்டிருந்த சூழலில், இயற்கை வளமும் மனித ஆற்றலும் கொள்ளை போவதைத் தடுக்க, தன் உடைமைகளையும், உயிரையும் தந்தவர் விடுதலைப் போராட்ட தியாகி வ. உ. சிதம்பரனார்.  

இங்கிலாந்து அரசு, நம் நிலத்தைக் கூறுபோட்டு,  சூறையாடுவதைத் தடுப்பதற்காக, போராடியவர்களைச் சிறையில் அடைத்திட, அந்த அரசால் நிறைவேற்றப்பட்டு இந்தியர்கள் மீது பாய்ந்ததுதான் தேச துரோகச் சட்டம்.

நாட்டின் சொத்தையும், நாட்டு மக்களின் உரிமையையும் காத்திட, போராடினால், அதற்குப் பெயர் தேசத் துரோகமா? என்று சீறி எழுந்த விடுதலைப் போராட்ட தியாகிகளில் முதன்மையானவர்தான் வ. உ. சி.  

பலரின் தியாகத்தால் உருவான விடுதலை இந்தியா, சமதத்துவ‌ச் சமூகமாக மலரும் என்பதே விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெருங்கனவு.  

வ. உ.சி. அவர்களின் ஆத்மார்த்தமான நண்பர் பாரதியார்; "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை" என்று முழங்கினார்.  பாரதியாரைத் தனக்கு முன்னோடியாகக் கொண்ட பாரதிதாசனார்;

"ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே

உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ

நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ"

"கீர்த்தி கொள் போகப் பொருட்புவியே

உன்றன் கீழிருக்கும் கடைக்கால்

எங்கள் சீர் தொழிலாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்"

என்று உழைப்பாளி மக்களின் வியர்வையில் உருவாக்கப்பட்டதே நவீன இந்தியா; அதன் அனைத்துக் கட்டுமானமும் என்று அறுதியிட்டுக் கூறினார்.  

இந்தியா விடுதலை அடைந்தவுடன் நவீன கட்டமைப்பை, தொழிற்சாலைகளை, காப்பீடு உள்ளிட்ட சேவைத் துறைகளை உருவாக்க பெரும் முதலாளிகள் முன்வரவில்லை.  

உழைக்கின்ற மக்கள் செலுத்திய வரிப்பணத்தில், தொழிலாளர்களின் உழைப்பில் உருவானதே இன்றைய பொதுத் துறை.  விடுதலைப் போராட்ட தியாகிகளின் உணர்வுகளில் வெளிப்பட்ட சமத்துவ இந்தியக் கனவு துளி கூட இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பொதுச் சொத்தை விற்பதையே குறியாக வைத்திருந்தார்கள்.  

அன்று திரு. வாஜ்பாயி தலைமையில் இருந்த இந்திய அரசு பொதுத் துறைப் பங்குகளை விற்பதற்கென்றே (Disinvestment Ministry) தனித் துறையை   உருவாக்கியது.

இன்று, அதன் நீட்சியாக, மிச்சம் மீதி இருக்கும் பொதுத் துறை மொத்தத்தையும் விற்று ஒழித்திட வழி செய்யும் பணமாக்கல் (monetisation) திட்டத்தைத் திரு. மோடி தலைமையிலான இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.  

 காப்பீடு, அரசின் ஏகபோக உரிமையாக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தி கூறினார்.  

அத்தகையக் காப்பீட்டுத் துறை,  துறைமுகங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள், நம் குழந்தைகளுக்குச் சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டுடன், வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய கனரக தொழிற்சாலைகள் என, அனைத்துப் பொதுத் துறைகளையும் பணம் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு இலாபம் ஈட்ட தனியார்ப் பயன்பாட்டிற்கு இந்திய அரசு தந்து விட, திட்டம் தீட்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாலைகளை உருவாக்கி, அதைப் பராமரித்து, மீண்டும் அரசிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போட்டு, சாலைகளைத் தனியாருக்குத் தந்தது இந்திய அரசு. என்ன நடந்தது? விவசாய நிலம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் இருந்த நிலங்களை மக்களிடம் இருந்து எடுத்துக் கொண்டு, தனியார் பெரு நிறுவனங்கள் சாலைகளை உருவாக்கினார்கள்,  அவ்வாறு உருவாக்கப்பட்ட சாலைகள் இன்று வரை தனியார் பராமரிப்பில் தொடர்கிறது. அந்த சாலையை அவசரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்கள் பணம் கொடுத்துதான் பயன்படுத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.  

அரசிற்குச் சாலை வரியும் செலுத்திவிட்டு, சாலையைப் பயன்படுத்த கட்டணமும் கட்ட வேண்டிய நிலை நீடிக்கச் செய்வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

 பணத்தைப் பெற்றுக் கொண்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுச் சொத்து மீண்டும் அரசிடம் வந்ததாக வரலாறு கிடையாது.  

நம் மூதாதையர்கள் இரத்தத்தாலும், வியர்வையினாலும் உருவாக்கப்பட்டப் பொதுச் சொத்துக்களை, இந்திய மக்களின் ஒப்புதல் இல்லாமல், தனியாரிடம் ஒப்படைப்பது, மக்களுக்குச் செய்யும் நன்மையா தீமையா? என்று ஒவ்வோர் இந்தியரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.  

பொதுச் சொத்தை தனியாரிடம் ஒப்படைக்காதே என்று சொல்பவர் தேச பக்தரா அல்லது பொதுச் சொத்தை தனியாருக்கு ஒப்படைத்து பணமாக்குகிறேன் என்று சொல்பவர் தேச பக்தரா?  பொதுத் துறையில் ஆலைகளையும், சாலைகளையும் உருவாக்கி நிர்வகிப்பது நிர்வாக திறமை.  அரசிடம் நிர்வகிக்கப் பணம் இல்லை, ஆகையால் பொதுத் துறையைத் தனியாரிடம் தந்து, பணமாக்குகிறேன் என்பது நிர்வாகத் திறமையின்மை.  திறமைக்கும் திறமையின்மைக்கும் உள்ள வேறுபாட்டை, தகுதி, திறமை குறித்து பேசுபவர்கள் விவாதிக்க வேண்டும்.

 நிர்வாகத் திறமை இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருந்து விலகுவது நல்லது;  விவரம் அறிந்தவர்கள் செயலாற்றக் கடமைப் பட்டவர்கள்; நல்லவர்களின் மௌனம் தீயவர்களின் கொடுஞ்செயலைவிடக் கொடுமையானது. மேனாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள், இன்று ஆசிரியர் தினமாக் கொண்டாடப்படுகிறது.  

ஆசிரியர் தினத்தில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய சாவித்திரிபா பூலே அவர்கள், தங்கள் உரிமைக்காக மக்கள் எவ்வாறு போராடி வெல்ல வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன் உதாரணமாகத் திகழ்ந்தார். அவர் சந்தித்த அவமானங்கள், கொடுமைகளை விட அதிகமாக இன்றைய ஆசிரியர்கள் சந்தித்து விடப் போவதில்லை.  ஆசிரியரும் தொழிலாளர் வர்க்கம்தான் என்பதை உணர்ந்து, போராடுகின்ற  உழைக்கின்ற வர்க்கத்துடன் துணிந்து நின்று, இந்தியாவின் சொத்தைக் காக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.  

கவுதம புத்தர் தொடங்கி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் எனப் பலரும் கூறிச் சென்றப்படி மக்களோடு உரையாடுவோம்.  நம் தேசம் காக்க - தேசத்தின் சொத்தைக் காக்க -  வ.உ.சி அவர்களின் இரத்தத்தால், வியர்வையால் கிடைத்த விடுதலை நிலைக்க, ஆசிரியர் தினத்தில், வ. உ. சி. பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.

 அதுவே வ. உ. சி. அவர்களின் 150வது  பிறந்த நாளில் அவருக்குச் செலுத்தும் மெய்யான புகழஞ்சலி.  

வ. உ. சி. புகழ் ஓங்குக!  அவர்தம் தியாகம் போற்றுக! ஆசிரியர் தின வாழ்த்துகள்!

-பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

;