ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டிலுள்ள மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு மத்திய அரசு இந்தியில் கடிதம் எழுதக்கூடாது என்று நீதிமன்றத்தில் போராடி வெற்றியும் பெற்றார் மதுரை எம்.பி. தோழர் சு வெங்கடேசன்.
ஆனால் நாய் வாலை நிமிர்த்தமுடியுமா? இப்போது கலாச்சாரத் துறை விருதுகள் தொடர்பாக கலாச்சாரத் துறை துணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். - மறுபடியும் இந்தியில்!
அதற்கு சூடாக தோழரும் பதில் எழுதியிருக்கிறார். இந்தியிலுள்ள அந்தக் கடிதத்தைத் திருப்பி அனுப்புவதாக அறிவித்திருக்கும் வெங்கடேசன், அரசு ஏன் மீண்டும் நீதிமன்றத்தை மீறுகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்.
அமைச்சரின் கடிதத்தையும் தோழரின் கடிதத்தையும் இரண்டையும் இணைத்திருக்கிறேன். தோழரின் பதில் மிகச்சிறப்பாக இருக்கிறது. அரசியல் ரீதியில் "செஞ்சிருக்கிறார்". படித்துப்பாருங்கள்.
இந்தியக் கலாச்சாரம் என்றால் அது இந்து-இந்திக் கலாச்சாரம் தானே என்று பிரகலாத் படேல் தீவிரமாக யோசிக்கக்கூடும். ஆனால் நாமும் விடக்கூடாது.
இந்தப் பிரச்சினை வெறும் ஒரு மொழிப் பிரச்சினைதானே என்று கருதி இங்கே பலர் கடந்துபோய்விடுவார்கள் என்று நமக்குத் தெரியும்.
ஆனால் அரசியல்சாசன நெறிமுறைகளை மீறி மீறி மீண்டும் மீண்டும் ஒற்றைமொழி ஆதிக்கத்தைக் கொண்டு வர நினைக்கும் மோடி அரசாங்கத்தை அம்பலப்படுத்திப் புறக்கணிப்பதற்கு மொழி உரிமை அரசியல் ஒரு உணர்ச்சிகரமான போர்க்களம் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது நல்லது.
என்னதான் திருக்குறளை மேற்கோள் காட்டினாலும் ராஜேந்திர சோழன் புகழ்பாடினாலும் தில்லிக்கு தமிழ்நாட்டின் உணர்வு ஒருபோதும் புரியப்போவதில்லை. அவங்க "கலாச்சாரம்" அப்படி.
- ஆழி. செந்தில்நாதன்
முகநூல் பதிவு.