election2021

img

முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் ஏன் ரெய்டு நடத்தவில்லை? திண்டுக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

திண்டுக்கல்:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் ஏன் வருமானவரித்துறை சோதனை நடத்த வில்லை என்று திண்டுக்கல்லில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கேள்வி எழுப்பினார். 

திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும்கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேலும் தொழில் வளம்பெருகும்; எய்ம்ஸ் மருத்துவமனை யை அமைப்போம் என்று மதுரைக்கு வந்த பிரதமர் மோடி அறிவித்துள் ளார். உண்மை என்னவென்றால் மோடி பாரதப் பிரதமராக வந்து 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் அவர் அறிவிக்கவில்லை. பாஜக கொண்டு வந்த ஜி.எஸ்.டி., பண மதிப்பு நீக்கம்நடவடிக்கையின் காரணமாக இருந்த தொழில் வளமும் நசுங்கி நாசமாக போய்விட்டது.  தமிழகத்தின் தொழில் முடக்கம் பிரதமருக்கு தெரியாதா? நூல்விலை ஏற்றத்தால் தமிழகத்தில் ஜவுளி தொழில்முடங்கிபோயுள்ளது. இதெல்லாம் பாரதப் பிரதமருக்கு தெரியாதா?

மோடி அரசு துரோகம்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த மருத்துவமனையை கட்ட மோடி அரசு சிறு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

கிடப்பில் போடப்பட்ட சேது கால்வாய் திட்டம்
தமிழகத்தின் தென் மாவட்டங் கள் மிகவும் பின்தங்கியுள்ளன. இதனைப் போக்கத்தான் சேது கால்வாய்திட்டத்தை உருவாக்கி  அதன் மூலம்தூத்துக்குடி  துறைமுகத்தை ஒருவலுவான துறைமுகமாக மாற்றினால் தென் மாவட்ட இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை. இன்றைக்கு சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தென் மாவட்ட இளைஞர்கள் தான். ஏனெனில் உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லை. பாஜகவைச் சார்ந்த  சுப்ரமணிய சாமி வழக்கு போட்டதன் காரணமாக 150 ஆண்டு கால கனவு திட்டமான சேது கால்வாய் திட்டம் நீதிமன்றத்தால்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக முன்முயற்சியால் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது அது தடுத்து நிறுத்தப்பட்டது.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜக
திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு கெடும் என்று பிரதமர் பேசுகிறார். இந்த தேர்தல் காலத்திலேயே யார் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்துள்ளார்கள் என்பதுதெரியும். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி யாக இருந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை எதிர்க்கட்சி வேட்பாளர் செந்தில் பாலாஜியை தரக்குறைவாக ஒரு ரவுடி போல விமர்சிக்கிறார். திமுக கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு போட்டுள்ளனர். அதே போல் கோவைக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்த போது அங்குள்ள பாஜகவினர் கடைகளை, ஆட்டோக்களை  அடித்து நொறுக்கியுள்ளனர். பலரை அடித்து மண்டையை உடைத்துள்ளனர். தேர்தல் காலத்திலேயே சட்டம்-ஒழுங்கை பாஜகவினர் சீர்குலைக் கின்றனர்.

ரெய்டுக்கு காரணம் தோல்வி பயம்
இந்த தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரி சோதனை தீவிரமாக நடத்தப்படு கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை வருமான வரிச் சோதனை நடத்துவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் எந்த நேரத்தில் நடத்த வேண்டும் என்ற நியதி இருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன் நிறுத்தப்பட்டு உள்ளார். அவர் தங்கியிருக்கும் போதுஎ.வ.வேலுவின் விருந்தினர் மாளிகையில் ரெய்டு நடத்தப்படுகிறது. மகள் செந்தாமரை வீடு உள்ளிட்ட 16 இடங்களில்  ரெய்டு நடத்தப்படுகிறது. 

வருமான வரிச் சோதனையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் அல்லது ஸ்டாலின் பெயருக்கு ஒரு இழிவை ஏற்படுத்தலாம்; அவப்பெயரை உண்டாக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது. பாஜக-அதிமுக கூட்டணி படுதோல்வி அடையப்போவதை தெரிந்து கொண்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளில் இந்த வருமான வரி ரெய்டும் ஒன்று.நாங்கள் வாக்காளர்களுக்கு பணம்தருவதில்லை. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள். ஒரு ஊருக்கு இரண்டு முறை பணம்தருகிறார்கள். தேர்தல் ஆணையம் அதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் வீடுகளில் ரெய்டு நடத்துவதன் மூலம் தேர்தல் பணிகளை முடக்கமுயற்சிக்கிறது மத்திய அரசு. திண்டுக்கல் தொகுதியில் அதிமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாக்காளர்கள் அதனை முறியடித்து சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டியை வெற்றி பெறச்செய்வார்கள். திமுக கூட்டணி கட்சியினர் தாங்களே வேட்பாளர்களாக நிற்பதுபோல பணியாற்றுகிறார்கள். திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வேறு தொகுதியில் போட்டியிட்டாலும் திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்வது எங்கள் வெற்றியை உறுதி செய்யத்தான்.

விசாரணைக் கூண்டில் அமைச்சர் சீனிவாசன்  
அதிமுக ஊழல் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அந்த வகையில் விசாரணை கமிஷன் கூண்டில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சீனிவாசன் வழக்கை முதல் வழக்காக ஏற்று நடத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவோம். திமுக ஏற்கனவே தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஏன் ரெய்டு இல்லை?
தேர்தல் நடைபெற ஒன்று, இரண்டு நாட்களே உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இருப்பது போலவே தெரியவில்லை. எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள் வருமான வரித் துறையினர். ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  வீட்டில் சோதனை நடத்தவில்லை? ஏன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் ரெய்டு நடத்தவில்லை? ஏன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வீடுகளில் நடத்தவில்லை? எங்கோ உள்ள அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.  பெயரளவிற்கு அதைச் செய்கிறார்கள். மத்தியில் பாஜக அரசு இருக்கிற வரை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எந்த ஒரு ஆணையமும் நடுநிலையோடு இருக்க முடியாது. சிபிஐ வருமான வரித்துறை என எந்தத் துறையாக இருந்தாலும் நடுநிலையோடு செயல்பட முடியாது. ஏன் நீதிமன்றம் கூடசுயேச்சையாக செயல்பட முடியாது. எல்லாத் துறையையும் பாஜக ஆட்டுவிக்கிறது. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதிக்கு நாடாளுமன்ற பதவி தருகிறார்கள், ஆளுநர் பதவி தருகிறார்கள் என்றால் அந்த நீதிமன்றம் எப்படி நியாயமாக செயல்படும். இது தான் பாஜக ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் லட்சணம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது  திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி, முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன்,வீ.மாரியப்பன், சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் உடனிருந்தனர். (நநி)

தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு தொகுப்பு 1 மற்றும் 3-ஆம் பக்கம் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் முழு செய்தி தொகுப்பு பதிவிடப்பட்டுள்ளது.     

;