மக்களவைத் தேர்தல் வாக்குஎண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகாவில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை என்று டுவிட் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை துவங்கி தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அளவில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இறுதி முடிவுகள் வெளியாகும் முன்பே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், ``எனது கன்னத்தில் வலுவான அறை விழுந்துள்ளது.எனக்கு இது பெரிய அடி. இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலிகள் என்மேல் வைக்கப்படும். நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்... நீண்டதூரம் செல்லவேண்டிய கடினமான பயணம் தொடங்கியிருக்கிறது. இதுவரை என்பால் நின்ற அனைவருக்கும் நன்றி... ஜெய்ஹிந்த்'' என்று பதிவிட்டிருக்கிறார்.