districts

img

செங்கல்பட்டு இரட்டைக்கொலை - 2 பேர் என்கவுன்ட்டர்

செங்கல்பட்டு காவல் நிலையம் எதிரில் நடைபெற்ற இரட்டை கொலையில் தொடர்புடைய இரு நபரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

செங்கல்பட்டு நகர் பகுதியில் மூன்று வருடங்களுக்கு பிறகு ரவுடிகள் அட்டகாசம் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட்டு விட்டு,  எதிரில் செங்கல்பட்டு கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் டீக்கடைக்கு  டீ குடிக்க வந்துள்ளார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்து கார்த்திக் மீது நாட்டு  வெடிகுண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டியும் உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்தி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தப்பியோடிய மர்ம கும்பல் செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வரும்  சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவரை டிவி பார்த்து கொண்டிருந்த போதே அதே கும்பல் மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியுள்ளது.

இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து  தப்பியோடிய கும்பல் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 

 காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பு கார்த்தி மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் பங்காளி வழியில் அண்ணன் தம்பிகள் என தெரியவந்துள்ளது. அப்பு கார்த்தி மீது ஏற்கனவே மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

வழக்கிற்காக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பும்போது வெட்டி சாய்த்து இருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகளை வல்லுநர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டார். தப்பியோடிய மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

செங்கல்பட்டு நகர பகுதியில் ரவுடிகள் கொலை சம்பவம் நடந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நகர் பகுதியில் கொலை நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், காவல் நிலையம் அருகே மக்கள் நடமாடும் பகுதியில் கொலை சம்பவம் நடந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மொய்தீன், தினேஷ் ஆகியோரை பிடிக்க முயலும்போது காவல்துறையினரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க ’என்கவுன்டர்’ வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டு குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.