செய்யூர், ஜூலை 16-
கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிபிஎம் காத்திருக்கும் போராட்டம் நடத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் பள்ளம்பாக்கம்,தாமரைக்கேணி,தேன்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிற ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நடந்து வரும் நிலையில், கொளத்துார் ஊராட்சிக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் மனு அளித்தனர்.
ஆனால் தற்போது வரை வேலை வழங்க நடவடிக்கை எடுக்காததால், 300க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன், சித்தாமூர் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என எழுத்துப்பூர்வமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் உறுதியளித்ததன் பேரில் காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது
இது போராட்டத்தில் அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராஜா, வட்ட செயலாளர் எஸ்.ரவி, மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுன் குமார், வட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராள மான மக்கள் கலந்து கொண்டனர்.