districts

img

வேலூரில் கதிர்ஆனந்த் அமோக வெற்றி

வேலூர், ஜூன் 5 - வேலூர் மக்களவைத் தொகுதி வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதி களை உள்ளடக்கியது.

இதில் வேலூர் மக்களவைத் தொகுதி யில் திமுக கதிர் ஆனந்த், அதிமுக மருத்துவர் ச.பசுபதி, பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி  ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் மகேஷ் ஆனந்த், நடிகர் மன்சூர்அலிகான் மற்றும் சுயேட்சை உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் களம் கண்டனர். வேலூர் மக்களவை மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 28, ஆயிரத்தி 273 இதில் ஆண்கள் 5,48,787, பெண்கள் 5,74,826, மூன்றாம் பாலினத்தவர் 102 உட்பட 11,23,715 வாக்குகள் பதிவானது. இதில் தபால் வாக்குகள் 7385 (தபால் வாக்கு கள் 4355 +மின்னனு தபால் வாக்குகள் 3030), வேலூர் தந்தை பெரியார் அரசுபொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 21சுற்றுகள் எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்து இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்து வந்தார். 21வது சுற்று முடிவு மற்றும் தபால் வாக்குகளை சேர்த்து திமுக கதிர் ஆனந்த் 5,68,692 வாக்குகளும், பாஜக ஏ.சி.சண்முகம் 3,52,990 வாக்குகளும்,  அதிமுக பசுபதி 1,16,964வாக்குகளும், நாம் தமிழர் மகேஷ் ஆனந்த் 52,707 வாக்கு களும் மற்றும் நோட்டாவிற்கு 8669 வாக்கு களும் கிடைத்தது. இதில் 2,15,702 வாக்கு கள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வே.ரா.சுப்பு லெட்சுமி அமைச்சர் துரைமுருகன் முன்னி லையில் வழங்கினார்.  அப்போது தேர்தல் பார்வையாளர்கள் ரூபேஷ் குமார், உஜ்ஜவல் போர்வல் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வி.அமலு உடனிருந்தனர். வேலூர் மக்களவைத் தொகுதி  17 தேர்தல்களை சந்தித்துள்ளது. இது 18வது தேர்தலாகும்.

அதில் 2019- ல் நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் 10,26,055 வாக்குகள் பதிவானது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று 8141 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.