districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை, ஆக.22- வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுடன் கூடிய காளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே  விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு செப்டம்பர் வரை நடைபெற்றது.  

2ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த 2023 ஏப்ரல் 6இல் துவங்கப்பட்டது.  இரு கட்ட ஆய்வின் போதும், தொன்மையான மனிதர்களால் பயன்படுத்தப் பட்ட பானை ஓடுகள்,   நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடுமண்ணாலான பொம்மை கள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள், 10க்கும் மேற்பட்ட திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டது.  

3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2024 ஜூன் 18 இல் துவங்கப்பட்டது. அதில்,  கண்ணாடி மணிகள்,  சுடுமண் பொம்மை, செப்புக்காசு, சுடுமண் அணிகலன்கள், வடி தட்டு, சுடுமண் முத்திரை, அலங்கரிக்கப்பட்ட விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு மற்றும் கி.பி 16ஆம் நூற்றாண்டு செப்புக் காசு  என 1400க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.  

தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வியாழனன்று   “கார்னீலியன்“ என்று அழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுடன் கூடிய  காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது.

இதுகுறித்து நிதி மற்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

கடந்த இரு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல் மணிகள் கிடைத்தன. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை  உருவம் கிடைக்கப் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இப்பதக்கம், 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 3.6 மில்லி மீட்டர் தடிமனும், 60 மில்லி கிராம் எடையும் கொண்டது. இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில் தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும்.

சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் கிடைக்கின்றன. இதுபோன்று கல்மணிகளில் உருவங்கள் குழிவான முறையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் ரோம் நாட்டில் சிறப்புற்றிருந்தது என அதில்  பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.