districts

img

காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

காவேரிப்பாக்கம், நவ. 29- ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் இங்கு ஊராட்சி ஒன்றியம், வேளாண்மை அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இதனால் பஜார் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படும். இந்நிலையில் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் தோண்டிய பிறகு சாலை பணிகள் நடைபெறவில்லை. இதனால் பள்ளங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி, கொசுக்களின் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதனால் இங்குள்ள தண்ணீரில் மீன் வளர்ந்து இருப்பதால் பொது மக்கள் தூண்டில் மற்றும் வலைகள் மூலம் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர். மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில், போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;