districts

img

தமிழ்நாடு அரசு ஊக்கம் அளித்து உதவிகள் செய்தது உலக செஸ் சாம்பியன் குகேஷ் நெகிழ்ச்சி

சென்னை, டிச.16 -  இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள டி.குகேஷ் திங்களன்று, சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “உலக செஸ் சாம்பியன் ஆவது என்னுடைய சிறுவயது கனவு. என் கனவை நிஜமாக்கி வீட்டுக்கு வருவதில் எனக்கு சந்தோஷம். எனது வெற்றியால் இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டுக்கும் எவ்வளவு பெருமையாக உள்ளது என்பதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. இந்த போட்டிகளில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. 14 ஆவது சுற்றில் வெற்றி பெறும்போது மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது. எதை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். செஸ் ஒரு சிறந்த விளையாட்டு. நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் எப்போது நான் வெற்றி பெற்றாலும், என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டி, பரிசு கொடுக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்றதால், கேண்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற முடிந்தது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமல்லாமல் நிறைய உதவிகளையும் செய்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.