தென்காசி, அக். 1- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமாக விளையாட்டு மைதானம் அமைத்துதரக்கோரி !அனைத்து அரசியல் கட்சிகள் சமுதாயப் பெரியோர்கள் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். தென்காசி மாவட்டம். சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலிருந்தும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் பள்ளியின் எதிரே உள்ள இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பள்ளி உயர்நிலைப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் (1957) பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான குறைந்தபட்ச வாடகையும் செலுத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் 2018ஆம் ஆண்டிலிருந்து பள்ளி நிர்வாகத்திற்கும் - அறநிலையத்துறைக்கும் வாடகை உயர்த்துவது சம்மந்தமாக எழுந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்று, இன்று பள்ளி நிர்வாகம் மைதானத்தை காலி செய்து தரவேண்டுமென கோவில் நீர்வாகம் தீர்ப்பைப் பெற்றுள்ளது. இது அமலாகும்பொழுது மாணவர்களின் விளையாட்டுத் திறன், செயல்திறன் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் இப்பகுதி சாதாரண ஏழை,எளிய மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி,விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளியின் அங்கீகாரமும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையும் - இந்துசமய அறநிலையத்துறையும் பரஸ்பரம் கலந்து பேசி அரசுப்பள்ளி மாணவர்களின் நலன்கருதி, விளையாட்டு மைதானத்தை நிரந்தரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசுதேவநல்லூர் அனைத்து அரசியல் கட்சிகள் சமுதாயப் பெரியோர்கள் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செப்.30 திங்களன்று வாசுதேவநல்லூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சித் தலைவரும், அமைப்பின் தலைவருமான கு.தவமணி தலைமை தாங்கினார். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.நடராஜன் திமுக ஐடி விங் பிரிவு செயலாளர்-பி. கண்ணன். இளைஞரணி - சஜ. சுந்தர். சிபிஎம் சார்பில் ப.சுப்பையா, கிளைச் செயலாளர் மா.முத்துமாரி ,சிபிஐ சார்பில். உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.