பெரியாரை பார்த்து, ’நல்லசாவே உனக்கு வராது’ என ஆன்மீகவாதிகள் சபித்த போது ; ‘சாவிலே நல்ல சாவு கெட்ட சாவு என்னடா?” என அறிவு பூர்வமாகக் கேட்டார். ‘செத்தபிறகு என்னை புதைத்தால் என்ன, எரித்தால் என்ன, கழுகு நரிக்கு தின்னக் கொடுத்தால் என்ன?” என பிராக்டிக்கலாக நடைமுறைசார்ந்து கேள்வி எழுப்பியவர் பெரியார். அவர் அளவு துணிச்சலும் தெளிவும் எல்லோருக்கும் வருவது அரிதே ! ஒவ்வொரு மனிதருக்கும் செத்த பிறவு கவுரவமான இறுறுதி சடங்குகள் என்பது மனித உரிமையில் ஒரு கூறாகும். அதே சமயம் உங்கள் மரணத்துக்குப் பின்னும் வாழ கண் தானம், உறுப்பு தானம், உடல் தானம் செய்யுங்கள். வாழும்போதே அதற்கான வழிமுறைகளை இறுதி செய்து விடுங்கள் என்றும் சொல்லுவது பிழையில்லை. மிகச் சரியானதும்கூட. சாவு வீடுகளில் தவறாது பிரச்சன்னமாகும் சடங்கு சட்டாம் பிள்ளைகளின் கெடுபிடியால் குடும்பம் திண்டாடாமல் இருக்கவும் - இறுதிச் சடங்கு எனும் தேவையற்ற வெட்டிச் செலவையும் மூடத்தனத்தையும் அகற்றிட எளிய இறுதிச் சடங்கிற்கு உயில் எழுதி வையுங்கள். கம்யூனிஸ்ட இயக்கத்தின் வாழும் வரலாறு ,மூத்த தோழர் சங்கரய்யாவை சந்திக்கச் செல்லும் அறுபது வயதைக் கடந்த ஒவ்வொருவரையும் உங்கள் பிள்ளைகள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்களா? என்றுதான் கேட்பார்? அண்மையில் நான் அவரைச் சந்தித்த போதும் கேட்டார்.
“மகிழ்ச்சியாக கவனித்துக் கொள்கிறார்கள்” என சொன்ன போது சந்தோஷப்பட்டார். திருமணங்களில் வாழ்த்தும் போது இருபக்கமும் உள்ள பெற்றோர்களைப் பேண தோழர் வலியுறுத்தி அறிவுரை வழங்குவார். ஆக, பிள்ளைகளின் பொறுப்பை நாம் வற்புறுத்து கிறோம். அதில் பிரச்சனை இல்லை. நீங்கள் உங்கள் பிள்ளைகளை சமூக அக்கறையின்றி வெறும் “போட்டிக் குதிரைகளாய்” வளர்த்தால் அவர்களும் போட்டியில் ஜெயிக்க முந்துவார்களே தவிர வளர்த்தோரைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். நீங்கள் பிள்ளைகள் மீது பாசமும் அக்கறையும் காட்டுவ தாய்க் கருதிக் கொண்டு, அவர்களின் உணர்வுக்கு மதிப் பளிக்காத சர்வாதிகாரியாக இருந்தால் நாளை அவனோ அவளோ அப்படித்தானே எதிர்வினை ஆற்றுவார்கள்.எனவே சமூக சிந்தனையை ஊட்டி வளருங்கள்! பிள்ளைகளின் இயல்பான வளர்ச்சிக்கு துணை நில்லுங்கள்! அதேவேளை சோஷலிச சமூகமே முழு சமூகப் பாதுகாப்பு என்பதையும் பிரச்சாரம் செய்வோம். முதியோர் உதவித் தொகை, முதியோர் பாதுகாப்பு, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த முதியோர் பாதுகாப்பு திட்டங்களை அரசிடம் கோருவோம்.
எல்லாம் சரி! முதியோர் இல்லங்கள் அப்போதும் தேவைப்
படுமா? ஆம். ஆம். ஆம். உங்கள் பார்வை புதிதாக்குங்கள்.
“இது ஒரு மனிதகாட்சி சாலை
‘பால்குடித்த மிருகங்கள்’
எப்போதாவது வந்துபோகும் இடம்”
-இப்படி ஒரு புதுக்கவிதை சீறும். படிக்கும் நமக்கும் கோபம் வரும்.
’பூமியில் ஒரு நரகம் முதியோர் இல்லம்’ என்றும்; ‘முதியோர் இல்லங்கள் வேகமாய் பரவிவரும் கரையான்கள்’ என்றும் கவிஞர்கள் ஆவேசப்படும் போது நாம் உயரிய பண்பாட்டைத் தொலைத்துவிட்ட வெட்க உணர்வு மேலிடும். ஆயினும் இது ஒரு பக்கத்தை மட்டுமே சுட்டுகிறது. யதார்த்தத்தை அறிவு பூர்வமாகவும் நடைமுறைக்கு சாத்திய மான வகையிலும் பார்க்க உணர்ச்சி மிகப்பெரும் தடைகல்லாகி விடும். அதன் ஆகச்சிறந்த உதாரணமே முதியோர் இல்லம் குறித்த நம் புரிதலும் அணுகுமுறையும்.
► கூட்டுக் குடும்பம் தான் முதியோருக்கு உரிய பாதுகாப்பும் கவுரவமும் என்பது சரிதான். எடுத்தும் சொல்லலாம். ஆனால், இனியும் அதுமட்டுமே நடைமுறை சாத்திய மானதா என்பதே மிகப்பெரும் கேள்வி. ஆர்எஸ்எஸ் அதை மட்டுமே மாற்றெனச் சொல்வதும் பென்ஷனுக்கே உலைவைக்க இதனை முன்நிறுத்துவதுமே பிரச்சனை. கொஞ்சம் நடைமுறை சார்ந்தும் யோசிக்க வேண்டியவர் களாகவே உள்ளோம்.
► இன்றைய பொருளாதார நெருக்கடியில் கூட்டுக்குடும்பம் நடத்தும் அளவு சற்று வசதியான வீட்டை வாடகைக்கு எடுப்பது எத்தனை பேரால் சாத்தியம் ? இட நெருக்கடியும் – பொருளாதார நெருக்கடியும் உறவுகளில் விரிசலை உருவாக்குகிறது என்பதன்றோ யதார்த்தம்?
► தனிக் குடும்பம் நடத்துவதே சிரமம் அதில் பெற்றோரை கூடவே வைத்துக் காப்பாற்றும் வாய்ப்பும் வசதியும் இல்லாத வர்கள் என்ன செய்வது? இதனை இயல்பாகப் பார்ப்பதா? குழந்தைகள் பெற்றோரை மதிக்கவில்லை என்கிற விதிவிலக் கான நிகழ்வை பொதுப்போக்காகக் கூறலாமோ?
► வசதியான வேலையும் கைநிறையச் சம்பளமும் கிடைக்கப் பெற்றவர்கள் தொழில் நிமித்தம் இடம் விட்டு இடம் ஓடிக்கொண்டிருக்க வேண்டியவர்களாயும் – நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருக்க வேண்டியவர்களாயும் உள்ள சூழலில்; அதுவும் வேகமான பொருளாதார நெருக்கடி யில் வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்திரவாதமான நிலை இல்லாத போது ; காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள ஓட வேண்டிய கட்டாயத்திலிருக்கும் இன்றைய இளைஞர்கள் பெற்றோருக்காக பணம் நிறைய செலவு பண்ண இயலும், ஆனால் உடன் இருந்து பார்க்க இயலுமா? இந்த நடை முறைச் சிக்கலில் இருந்து விடுபட தரமான முதியோர் இல்லங்களைத் தேடுவது எப்படிப் பிழையாகும்?
பெற்றோர்களின் உணர்வைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதும்; தம் கடமையை உணர்ந்து செயல்படுவதும் மிக அவசியத் தேவை. அது போல் மாறியுள்ள சூழலைப் புரிந்து பிடிவாதங்களைத் தளர்த்தி பிள்ளைகளோடு இணைந்து வாழ பெற்றோரும் முயலவேண்டும். இது இருவழிப் பாதை. இப்படி இருவரும் மனம் ஒத்து நல்ல பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்குவதுக்கே முன்னுரிமை தரவேண்டும். அதற் காக உரக்கப் பேசுவோம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இத்தகைய இணக்கமான சூழல் நூற்றுக்கு 75 பேருக்கு அமையப் பெற்றாலே அது பெரும் வெற்றி. அப்போதும் 25 விழுக்காடு முதியோருக்கு முதியோர் இல்லங்கள் நிச்சயம் தேவைப்படுமே !அதுவே பெரும் எண்ணிக்கையாகுமே ! தமிழ்நாட்டில் மட்டுமே அது 25 லட்சத்தைத் தாண்டுமே ! கணக்கிட்டுப் பாருங்கள் தேவையின் அளவு பெருமூச்சுவிட வைக்கும். அதனை யோசிக்க வேண்டாமா ? முதியோர் உதவித்தொகை பெறுவோர் தொடங்கி – பென்ஷன் பெறும் அரசு ஊழியர் – இனி பென்ஷனே கிடைக்கா மல் போகிற ஊழியர்கள், வசதியான குடும்பத்தில் உள்ளோர் வரை கணிசமான முதியோருக்கு இல்லங்கள் தேவை. ஒன்றிய அரசின் கொள்கைக் குறிப்பும் சரி ,தமிழ்நாடு அரசின் கொள்கை குறிப்பும் சரி முதியோர் இல்லங்கள் குறித்து போதுமான விபரமும் அழுத்தமும் இலக்கும் முன்மொழிய வில்லை என்பதுதான் வருத்தம். தற்போது இந்தியா முழுவதும் தோராயமாக 850 முதியோர் இல்லங்களே உள்ளன என்பதும் ; அரசு சார்ந்த இல்லங்கள் மிகக்குறைவு என்பதும் ; தொண்டு நிறுவனங்கள் மற்றும் வசதியானோருக்கு தனியார் நடத்தும் இல்லங்களே ஓரளவு தேவையின் மிகச் சிறிய பகுதியை நிறைவு செய்கிறது என்பதும் உறுத்தும் உண்மை அல்லவா ? தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு இரண்டு முதியோர் இல்லங்கள் திறக்கப்படும் என்கிற ஜெயலலிதா முதல்வராக இருந்த போது செய்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பான தன்றி அமுலாகவில்லையே ! வட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அரசு உதவியோடு உருவாக்கப்படும் என்கிற கொள்கை குறிப்பு ஆழக்குழி தோண்டி புதைக்கப் பட்டுவிட்டதேன் ? பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல்கிப் பெருகியுள்ள சூழலில்;
அரசு கணிசமான நிதி உதவி தருவதாக அறிவித்த பின்னும் முதியோர் இல்லங்கள் நடத்த தன்னார்வத் தொண்டு பொங்கி வழியாதது ஏன் ? குழந்தை இல்லங்களை நடத்துவது ஓரளவு எளிது. ஆனால் முதியோர்களை சமாளிப்பது மிகச் சிரமம் உடல் சார்ந்த பிரச்சனைகள், உளம் சார்ந்த பிரச்சனைகள், ஈகோ எல்லாம் சிக்கல்தான். அதிலும் பாயில் நோயில் வதைபடும் முதியோரை அனுசரணையோடு காத்திட அளப்பரிய தொண்டுமனம் வேண்டும். இவ்வளவையும் எதிர்கொள்கிற முதியோர் இல்லங்கள் வேண்டும்! இந்த வெற்றிடத்தில் வெறும் லாப நோக்கோடு எந்திரகதி யாய் இயங்கும்\தனியார் முதியோர் இல்லங்கள் பெருகு கிறதே; அங்கு பணமே தாரக மந்திரம். இதற்கு மாற்று என்ன? முதியோருக்குத் தேவை படுத்துக் கிடக்க ஒரு கட்டிலும், வேளாவேளைக்கு சாப்பாடும் மட்டுமே என்கிற வறட்டுப் புரிதலோடு முதியோர் இல்லங்களைப் பார்க்கும் பழுதான பார்வையை முழுதாகத் தலைமுழுகப் படவேண்டும். இங்கு ஓர் செய்தி முக்கியமானது. கியூப நாட்டின் பெரும் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ லத்தின் அமெரிக்க பாதிரியாரோடு நடத்திய உரையாடல் ”மதம் மக்கள் புரட்சி” என்கிற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. [அ.குமரேசன் மொழியாக்கம். அலைகள் வெளியீடு] அதில் ஓர் கேள்விக்கு பதில் சொல்லும் போது காஸ்ட்ரோ சொல்லுவார் முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவற்றை அரசு நடத்துவதற்கும் தொண்டு நிறுவனங்கள் நடத்து வதற்கும் மிகுந்த வேறுபாட்டைக் காண்கிறேன் .
அரசு இயந்தி ரத்தின் பற்களுக்கு விதி தெரியும், இதயம் தெரியாது .அருட் சகோதிரிகளுக்கு இதயத்துடிப்பு தெரியும் .ஆகவேதான் அவர்களை நம்பி உதவுகிறது கியூப அரசு என்றார். என் அனுபவமும் என் அண்ணன் மகள்களுக்கு இடம் தேடி சென்னை முழுவதும் அலைந்து எல்லா குழந்தை இல்லங்களையும் பார்த்தேன், அருட் சகோதரிகள் நடத்தும் இல்லத்தில் உள்ள கனிவை அரவணைப்பை யும் வேறு எங்கும் காணவில்லை. அவர்களை அங்கேயே சேர்த்தேன். கல்வி கற்று முதுகலை பட்டம் வரை வாங்கி நன்கு வாழும் நிலை வந்தது. சாதி, மத மறுப்புத் திருமணமும் ஆகிவிட்டது. மதம் மாற்றிவிடுவர் என சிலர் விடும் பொய்கள் அற்ப ஆயுள் கொண்டவையே! இன்னொரு அனுபவம். பத்தாண்டுகளுக்கு முன்பு சீன நாட்டிற்கு கட்சிப் பத்திரிகையாளர்கள் குழுவில் சென்றேன் .பஸ்ஸ்லில் ஓரிடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது ஓர் முதியோர் இல்லத்தை பார்வையிடும் ஆர்வத்தை சொன் னோம். அடுத்த பத்து நிமிடத்தில் அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் இருந்தோம். அது முதியோர் இல்லமா? ஹாலிடே ரிசார்ட்டா என்கிற சந்தேகமே எங்களுக்கு வந்துவிட்டது.சகல வசதிகளுடனும் அது ஓர் நந்தவனமாய் இருந்தது. முதியோர் நம்மிடம் உயிர் யாசகம் கேட்கவில்லை. கவுரவ மான வாழ்க்கை அவர்களின் அடிப்படை மனித உரிமை. எனவே முதியோர் இல்லம் அந்நோக்கில் எங்கணும் அமைக்கப்பட வேண்டும். முதியோர் இல்லங்கள் நல்ல சுற்றுச் சூழலோடு அமைய வேண்டும்.
நல்ல படுக்கை, சத்தான அவரவருக்குத் தேவை யான உணவு , சரியான மருத்துவ உதவி, சுயதேவையை நிறைவு செய்யும் காய்கறித் தோட்டம் [இதனை முதியோர்களே பராமரிக்கலாம்] பொழுதுபோக்க உரிய வாய்ப்புகள், உலாவப் பூங்கா, நூலகம், கணினி, நடைபயிற்சிக்கு தோதான இடம், முதியோர்களின் ஆற்றலை, ஈடுபாட்டை பகுத்தறிந்து பயன் படுத்த ஊக்குவிக்க தக்க வழிகாட்டல், மொத்தத்தில் முதியோர் இல்லங்கள் தென்றல் அரவணைக்கும் பூங்காக்களாக மாற வேண்டும் என்பது கனவல்ல. தொலை நோக்கு திட்டம். படிப்படியாக இந்தத் திக்கில் நடை போட வேண்டும். ஒரு சர்வாதிகாரி எல்லாருடைய கோரிக்கைகளையும் நிராகரித்து வந்தான். அவனே சிறைத்துறையை சீர் திருத்த வேண்டும் என்கிறபோது நூறு விழுக்காடு ஏற்று செயல்படுத்தி னானாம். காரணம் நாளை தனக்குத் தேவைப்படலாம் என்கிற சுயநலம்தான். அது எப்படியோ இன்னும் கால் நூற்றாண்டுக்குப் பின் மொத்த மக்கள் தொகையில் மூண்றில் ஒரு பகுதி முதியோ ராகவே இருப்பர். எனவே சகலரும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது. இன்றைய இளைஞர் நாளைய முதியோரே! முதியோர் இல்லங்கள் சாபக்கேடல்ல தவிர்க்க முடியாத சமூகத்தேவை என்பதுணர்க ! முதியோர் குறித்த ஆரோக்கியமான சமூகப் பார்வையை கட்டி எழுப்புவீர் ! முதுமை வரமா ? சாபமா ? இக்கேள்வியே பிழை.முதுமை இயல்பு. குழந்தமை, இளமை, நடுத்தரம், முதுமை எல்லாம் இயல்பு. ஒவ்வொன்றிலும் நல்லதும் கெட்டதும் உண்டு. வாழ்க்கையே இரண்டின் கூட்டுக் கலவைதானே! எல்லா பருவத் தையும் போல முதுமையும் என்பதை இயல்பாக அறிக ! முதுமை வரமா? சாபமா? இரண்டும் இல்லை இயல்பு. இயல்போடு முதுமையை ஏற்று வாழப்பழகுவீர்!