மானாமதுரை சிவில் சப்ளை குடோனில் ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம் விவசாயிகள் சங்கம் புகார்
சிவகங்கை, ஏப்.26- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளா கத்தில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நெல் குடோனில் ஆயிரம் நெல் மூட்டைகள் காணாமல் போனது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி நேரில் விசாரணை மேற்கொண்டார். மானாமதுரை சிப்காட் வளாகத்தில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நெல் கொள்முதல் குடோன் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மூட்டைகள் விவ சாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நெல் மூட்டைகள் ஆயிரம் மூட்டைகள் வரைக்கும் காணாமல் போய் இருப்பதாக கிடைத்த தக வலின் அடிப்படையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தில் மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் வீர பாண்டி கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 58 நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட்டன. இந்த 58 மையங்களில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி ரூபாய் வரைக்கும் நெல் கொள்முதலில் முறைகேடு செய்திருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி ரூபாய் ஊழலை மூடி மறைப்ப தற்காக தற்போது இந்த நெல் மூட்டைகள் காணாமல் போய் இருப்பதாக தெரிய வருகிறது. ஊழலை மறைப்ப தற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கி றார்கள் என்று பரவலாக தெரிய வருகிறது .இது தொடர் பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காலமானார்
மதுரை, ஏப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலூர் தாலுகா வெள்ளலூர் கிளை உறுப்பினர் கே.சந்திரசேக ரனின் மனைவி ச.அமிர்தம் (55) காலமானார். அன்னாரது மறைவுச்செய்தி அறிந்து கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர்கள் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
காணாமல் போன 105 அலைபேசி உரியவர்களிடம் ஒப்படைப்பு
தேனி, ஏப்.26- தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 அலை பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உரியவர்களிடம் ஒப்படைத்தார் . தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போன தாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இது குறித்து தேனி சைபர் கிரைம் காவல்துறையினர் அலை பேசி எண்களை வைத்து தகவல்களை சேகரித்து வந்த நிலையில் 105 அலைபேசிகளை கைப்பற்றினர் .அவை களை புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிர வீன் உமேஷ் டோங்கரே உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவே கானந்தன், தனிப்பிரிவு ஆய்வாளர் முருகானந்தம் ,சைபர் க்ரைம் சார்பு ஆய்வாளர் உமாதேவி ஆகியோர் உடனி ருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, இந்தாண்டு ஜனவரி முதல் காவல் நிலையங்களில் அலைபேசி காணா மல் போனதாக 444 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏற்க னவே 140 அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. புதன்கிழமை ரூ 10.50 லட்சம் பெறுமான 105 அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
மே 1இல் கிராம சபைக் கூட்டம்
விருதுநகர், ஏப்.26- மே 1 அன்று விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். அதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகம், கிராம வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு விபத்துகளில் காவலர் கல்லூரி மாணவர் பலி
சின்னாளப்பட்டி, ஏப்.26- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை சேர்ந்தவர் கந்தவேல் 75 வயது இவர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆவார் சம்பவத்தன்று மதுரை திண்டுக்கல் சாலையில்இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம் இவர் மேல் மோதியதில்நிலை தடுமாறி விழுந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். இதே போல் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பெருமாள் கோவில் பட்டி ரங்கசாமிபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் 19திண்டுக்கல் பார்வதி கலை கல்லூரியில் பிஎஸ்சி ஐ டி இரண்டாம் ஆண்டு படித்து வரு கிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று விட்டு வரும் வழியில் போக்கு வரத்து நகர் அருகில் லாரியில் உரசி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துகள் குறித்து அம்பாத்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து
தேனி, ஏப்.26- நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடைமழை பெய்து வருவ தால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது . முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக உள்ளது. அணைக்கு 413 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 247 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 57.89 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழையளவு பெரியாறு 32, தேக்கடி 4.2, கூடலூர் 4.6, உத்தமபாளை யம் 7.2, சண்முகா நதி அணை 16.4, போடி 2, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 18, மஞ்சளாறு 3, பெரியகுளம் 75, வீர பாண்டி 30.4, அரண்மனைப்புதூர் 32.4, ஆண்டிபட்டி 21.4 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.
வீரபாண்டி கோயிலில் பக்தரிடம் நகை, பணம் கொள்ளை
தேனி, ஏப்.26- வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் தங்கிய தம்பதி யிடம் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், தேவாரம் காவல்நிலையம் நிலையம் அருகே காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது40). இவரது மனைவி மாலதி. இவர்கள் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகின்ற னர். சம்பவத்தன்று வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தனர். அப்போது நடை அடைக்கப் பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் மாவிளக்கு எடுக்கும் இடத்தில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 72 ஆயி ரத்து 800 ஆகும். இதுகுறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கண்காணிப்பு கேமிரா க்களை ஆராய்ந்து, திருடர்களை தேடி வருகின்றனர்.
கடமானை வேட்டையாடி கறிசமைத்த 3 பேர் கைது
கடமலைக்குண்டு, ஏப்.26- தேனி மாவட்டம், வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட ஐந்தரைப்புலி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வருசநாடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இந்த தகவலை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் தர்மன் வனக் காப்பாளர் கமலேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப் போது ஐந்தரைப்புலி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகு தியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த தேக்கம் பட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 40), பொம்மையைக் கவுண்டன்பட்டியை சேர்ந்த ஆசைத்தம்பி (42), ஐந்தரை புலியைச் சேர்ந்த முருகன் (48) ஆகிய 3 பேரையும் வனத் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களி டம் இருந்து 5 கிலோ அளவில் கடமான் கறியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற் கொண்ட போது இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப் பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே 16.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் மூன்று பேர் கைது
விருதுநகர், ஏப்.26- வெம்பக்கோட்டை பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ஆலங்குளம், சுண்டகுளம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த இரு சரக்கு வாக னங்களை நிறுத்தி சோதனையிட்டதில், 1650 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாக னங்களில் வந்த திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியைச்சேர்ந்த முத்து என்ற பேச்சிமுத்து, கூசாலி பட்டியைச் சேர்ந்த கிறிஸ்டியன்பாலா(22), பாஸ்டின் (34) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், கோவில் பட்டியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(35), விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பசும்பொன் என்ற ரமேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
வேலை வாங்கி தருவதாக ரூ.33 லட்சம் மோசடி செய்து மிரட்டிய பேராசிரியர் கைது
தேனி, ஏப்.26- தேனி அருகே போடி யைச் சேர்ந்தவருக்கு நிரந்தர பேராசிரியர் வேலை வாங் கித் தருவதாக பேராசிரியை யிடம் ரூ. 33 லட்சம் மோசடி செய்த உசிலம்பட்டி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி பேராசிரியர் ரவி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அமராவதி நக ரைச் சேர்ந்த நாகேந்திரன் மனைவி முனைவர் லதா. இவரிடம் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.33 லட்சத்தை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் கல்லூரியில் கணிதத்துறையில் பேராசி ரியராக பணிபுரிந்து வரும் ரவியும்,மதுரை யாதவர் கல்லூரியில் உதவி பேராசிரி யராக பணிபுரியும் இவரது மகள் சபிதாவும், மதுரை மெஜூரா கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியரின் மருமகனும் சபீதாவின் கண வருமான விக்னேஷ் குமார் ஆகிய மூவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பி கேட்டால் பண பலம், அரசி யல் பலம் வைத்துக் கொண் டும் கொலை மிரட்டல் விடு வதாக கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக லதா, மதுரை தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார் .அதன் பேரில் தேனி மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் பேராசிரியர்கள் ரவி, சபிதா மற்றும் விக்னேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். பேராசிரியர் ரவியை கைது செய்து சிறையில் அடைத்த னர்.
மீனவர்களில் 6 நாள் போராட்டம் வாபஸ் வைகை அணையில் மீன்பிடி துவக்கம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தேனி, ஏப்.26- வைகை அணையில் 6 நாட்கள் நடைபெற்ற மீன வர்கள் வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டு புதன்கிழமை முதல் மீண்டும் மீன் பிடிக் கும் பணி துவங்கியது. தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே உள்ள வைகை அணையில் சுமார் 18 கிரா மங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். கடந்த 65 ஆண்டு களாக அரசே மீன்பிடிப்பை நடத்தி வந்தது. பிடிபடும் மீன் களில் சரிபாதி அரசுக்கும், மறுபாதி மீனவர்களுக்கும் என்ற பங்கு அடிப்படையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந் தது. இந்நிலையில் மீன் பிடிக்கும் உரிமை தனியா ருக்கு வழங்கப்பட்டது. இதில் ஏற்கனவே நடைமுறை யில் இருந்த பங்கு மீன்கள் நிறுத்தப்பட்டு, பிடிக்கப் படும் மீன்களுக்கு ஏற்ப மீனவர்களுக்கு கூலி வழங் கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே செவ் வாய்க்கிழமை மாலை பேச்சு வார்த்தை நடைபெற்றது.ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், வட் டாட்சியர் திருமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம், மீன்வளத் துறை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் பஞ்ச ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜிலேபி மீன்கள் சரிபாதியாகவும், கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட மீன்கள் மூன்றில் ஒரு பங்காக வும் மீனவர்களுக்குப் பிரித்து தருவது என முடிவு செய்யப் பட்டது.இதனை இருதரப் பும் ஏற்றதால் சமரசம் ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து ஒருவாரத்திற்குப் பிறகு புதன்கிழமை முதல் வைகை அணையில் மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சுழி அருகே ஜல்லிக்கட்டு போட்டி
திருச்சுழி, ஏப்.26- திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் வெகு விமரிசையாக நடை பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ளது செம்பொன்நெருஞ்சி கிரா மம். இங்குள்ள கருப்பசாமி, அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக் கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் கலந்து கொள்ள இணையதளம் மூலம் 1500 காளைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர் கள் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் போட்டியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தொடங்கி வைத்தார். இதையடுத்து, 400 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட் டன. மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் காளைகளை அடக்கினர். இதில் 8 பேர் காயமடைந்தனர். பின்பு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருப் புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். முடிவில், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளை களின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரங்கள் மின்சார அடுப்புகள் மற்றும் மின்விசிறிகள் உள் ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. ஆயி ரக்கணக்கான கிராம மக்கள் இப்போட்டி யை கண்டு ரசித்தனர்.