districts

img

பதக்கக் கனவுடன் பாரீஸ் ஒலிம்பிக்கில் மதுரை வீரர் சந்தோஷ்குமார்

சந்தோஷ்குமார் மதுரை மாவட்டம் சக்குடியில் 1998-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழரசன். தாயார் விமலா ராணி. இவரது சகோதரர் ஆனந்தகுமார். தற்போது சந்தோஷ்குமார் குடும்பத்தினர் மதுரை வண்டியூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

சந்தோஷ் குமார் இந்திய தடகளத்தில், குறிப்பாக ஓட்டப்பந்தயத்தில் வளர்ந்து வரும் திறமைசாலி என்றால் அது மிகையல்ல. 

சந்தோஷ்குமார் 400 மீட்டர் ஓட்டத்தில் திறமையாளர். தற்போது பாரீசில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற உள்ள 4x400மீ தொடர் ஓட்ட போட்டியில் பதக்கம் பெற்றுவிட வேண்டுமென்ற லட்சியத்துடன் உள்ளார். 

முதன்முதலில் 2017-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி விஜயவாடாவில் 18 வயதிற்குட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று இலக்கை 47.40 அடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.  தொடர்ந்து முயற்சித்து  2024-ஆம் ஆண்டு தனது இலக்கை 46.02 வினாடிகளில் அடைந்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இரண்டு முறை ஆசிய விளை யாட்டுப் போட்டிகளிலும், உலகளவில் நடைபெற்ற 20 வயதிற்கு ட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் எட்டு இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

2023-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி பாங்காக்கில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தனது இலக்கை 49.09 வினாடிகளில் அடைந்து குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினார்.

சீனாவில் உள்ள (Hangzhou) காங்சூ நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 2 தேதி நடைபெற்ற 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்று  முறையே 49.28  வினாடிகளில் இலக்கை அடைந்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

2024-ஆம் ஆண்டு மே மாதம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 27-ஆவது தேசிய சம்மேளன சீனியர் தடகளப் போட்டியில் இலக்கை 50.04 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் தன் மகன் தேர்வாகியது சந்தோஷம் என்றும் இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெருமை சேர்ப்பார் என்றும் அவரது தந்தை தமிழரசன் கூறினார். ஏற்கனவே தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் தனது மகன் பதக்கம் வென்றுள்ளதையும் நினைவுகூர்ந்தார் அவர். 

சந்தோஷ் குமாரின் தாயார் விமலா ராணி கூறுகையில், “ எனது மகனின் வெற்றிக்குப் பின்புலமாக மதுரையைச் சேர்ந்த பயிற்சியாளர் சேதன், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சுகந்தி ஆகியோர் உள்ளனர். 2021-ஆம் கொரோனா தொற்றுப் பரவலால் ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. தற்போது 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.