மதுரை ஆக.10- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து இன்று (ஆக.10) டி.கல்லுப்பட்டியில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய 3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட கோரியும், காலி பணியிடங்களை உடனே நிரப்பிடவும், காண்ட்ராக்ட் அவுட் சோசிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை தொடர் இயக்கம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில் டி.கல்லுப்பட்டி தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.