புதுக்கோட்டை, டிச.21 வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதால் மட்டும் தேர்தல் சீர்திருத்தம் வந்துவிடாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருமயத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் நடவடிக்கை தேவையற்ற ஒன்று. பெண்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய எவ்வளவோ விசயம் உள்ளது. பொதுவாக நாட்டில் ரத்தச் சோகை உள்ளிட்ட காரணங் களால் பெண்களின் ஆரோக்கியம் மிக மோசமாக உள்ளது. கருவுற்று இருக்கும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தோ, மருத்துவ வசதியோ கிடைப்பதில்லை. இதில் எல்லாம் அக்கறை செலுத்தாமல், நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்காமல் தான்தோன்றித்தனமாக சட்டங்களை இயற்றுவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் சீர்திருத்த மசோதா என்கிற பெயரில் வாக்காளர் அடையாள அட்டை ஆதாருடன் இணைக்கும் மசோதா, மக்களவை யில் அராஜகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நடைமுறையில் பண ஆதிக்கத்தால் தேர்தல் ஜனநாயகம் முற்றிலுமாக சீரழிக்கப்பட்டு வருகிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிட மிருந்து பத்திரங்களாக தேர்தல் நிதி வசூலிக்கப்படுகிறது. இதுபற்றியெல்லாம் மூச்சுவிடாமல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது ரகசிய வாக்களிப்பு முறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை கள் குறித்து ஒன்றிய அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதனால், தமிழக மீனவர்கள் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உயிர் பாதுகாப்பு மட்டுமல்ல. படகு, வலை போன்ற மீனவர்களின் மூலதனமும் நாசமாக்கப்படுகிறது. ஒன்றிய அரசு நினைத்தால் இருநாட்டு தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எட்டமுடியும். அதற்கு மோடி அரசு தயாராக இல்லை. தமிழக அரசு மூடிக்கிடக்கும் சர்க்கரை ஆலைகளை திற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளை களைவதற்கு உயர்மட்டக்குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவார ணத் தொகை போதுமானதாக இல்லை. முதல்வர் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மழைப் பாதிப்புக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய்கூட வழங்காமல் கிணற்றில் போட்ட கல்லாக மவுனமாக இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து மூலதனம் கொண்டு வர வேண்டுமென்பதற்காக கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு அளவற்ற சலுகையும் உரிமை களும் வழங்குவது சரியல்ல. இதனால், இளைஞர்கள், இளம் பெண்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்படு கின்றனர். அவர்களின் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. இப்படி நமது இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏன் சலுகை களை வழங்க வேண்டும். சிறுதொழில் முனை வோர் நாடுதழுவிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு மோடி அரசு செவிசாய்க்க வேண்டும். பழுதடைந்த காலனி வீடுகள். தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும். அரசுப் பணியிடங்களில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் முறையை ரத்துசெய்துவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.