districts

img

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிடுக!

மதுரை, நவ. 15-  மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த  மதுரேசன் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரொக்கப்பரிசாக ஒன்றிய அரசு வழங்குகிறது. மாநில அரசு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது.  பொதுவான ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசோ ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வழங்குகிறது. அனைத்து விதமான வீரர்களையும் ஒன்றிய , மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை.  வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. அனைத்து வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும். எனவே, தமிழகத்திலும், சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று  கூறியிருந்தனர்.   இந்த மனுக்களை  செவ்வாயன்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் மனுதாரர்களின் கோரிக்கை மீது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சாதகமான முறையில் பரிசீலித்து 12 வாரத்திற்கள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.