districts

கோவிலில் வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிறப்பாகுபாடு பார்க்கக் கூடாது

மதுரை, செப் 10-  கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது என்றும் கோவில் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தலமாகும். கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என்றும்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதி முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கின் மீதான விசாரணை சனிக்கிழமையன்று  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் , “கோவில் ஒரு வழிபாட்டுத் தலமாகும். கோவில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் கோவிலில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்தே விழா கொண்டாடுமாறு தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

;