தூத்துக்குடி, அக். 1- விடுமுறையின்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையின்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கோ வில்பட்டியில் உள்ள சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எனக் கூறி மாணவர்களை பள்ளிகளுக்கு வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாக, பெற்றோர் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பான குரல் பதிவுகள் சமூக வலதளங்களில் பரவின. இந்நிலையில், கோவில்பட்டி பகுதியில் பல பள்ளிகளில் திங்கள்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும். மாணவர்-மாணவிகள் பள்ளிச் சீருடையிலேயே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறப்படும் புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.