கடமலைக்குண்டு, ஜூன்.15- தேனி மாவட்டம், வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மழை இல்லை. அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக காற்று வேகமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு மூல வைகை ஆறு நீரில்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உறை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பு வைகை ஆற்றில் அமைந்துள்ள உறை கிணறுகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.