மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் துல்லுக்குட்டி நாயக்கனூரில் போக்சோ வழக்கு விசாரணையில் உள்ள நபர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் பெ.ராஜா சங்கர் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுபற்றி எம்.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது, மேற்கண்ட ரவுடி கும்பல் காவல்நிலைய வளாகத்திற்குள்ளேயே புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. ரவுடிக் கும்பலுக்கு ஆதரவளித்து, ராஜாசங்கர் குடும்பத்தார் மீது பொய் வழக்கு போட்ட எம்.கல்லுப்பட்டி காவல்துறையைக் கண்டித்தும் தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் எழுமலையில் திங்களன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.காசிமாயன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த. செல்லக்கண்ணு ஆகியோர் பேசினார்கள். நிறைவு செய்து கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, எஸ்.பி.இளங்கோவன், வி.பி.முருகன், செ.முத்துராணி, பி.ஜீவானந்தம், வி.சமயன் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.