வெம்பக்கோட்டை, பிப்.23- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும் இடைநின்ற மாணவர்கள் குறித்தும், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பின்பு, வெம்பக்கோட்டை அணையில் நீர் இருப்பு, வரத்து கால்வாய் மற்றும் மதகுகளை ஆய்வு செய்து, அங்கு பராமரிப்புப்பணிகளை செய்ய அறிவுறுத்தினார். பின்பு, கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவ மனையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மேட்டுக்காட்டில் தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து எதிர்கோட்டை நியாய விலைக் கடையில் உள்ள அரிசியின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.