மதுரையில் அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியரை சு.வெங்கடேசன் எம்.பி நேரில் சந்தித்து பாராட்டினார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி பூரணம் அம்மாள்.கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிடவே, வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி பூரணம் அம்மாளுக்கு கிடைத்தது.இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆயி பூரணம் அம்மாளின் மகள் ஜனனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறக்கும் போது, தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4.50 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். நிலத்தின் சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும். கடந்த 5-ஆம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
பின்னர் மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக்கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி, தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் ஆகியோர் முன்னிலையில் ஆயி பூரணம் அம்மாள் முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் நிலத்தை தானமாக வழங்கியதற்கான ஆவணத்தை ஒப்படைத்தார்.
இந்த தகவல் அறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆயி பூரணம் அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது சமூக வலைதள பதிவில், ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது! சு. வெங்கடேசன் எம் பி நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடனையென நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் திரு. இராஜேந்திரன் அவர்கள் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார். இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் அவர்கள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும். நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராக தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள்! இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது அந்த வகையில் தான் பூரணம் அம்மாவை மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன். உடன் கனரா வங்கியின் வட்டார மேலாளர் சாகு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் என அதில் பதிவு செய்துள்ளார்.
வங்கி ஊழியரின் இச்செயலுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.