districts

img

அரசு வேலை வாங்கித்தருவதாக 11 பேரிடம் ரூ 45.88 லட்சம் மோசடி : போடியைச் சேர்ந்தவர் கைது

தேனி, மார்ச் 22- அரசுத்  துறையில்  உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக 11 நபர்களிடம் ரூ.45.88 லட்சம் மோசடி செய்ததாக போடி யைச் சேர்ந்த வாலிபர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் . உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பம்பட்டி கிராமத்தைச்  சேர்ந்தவர் வினோத்குமார் (22). இவர் தேனியில் உள்ள பெரியகுளம் சாலையில் செயல்படும் தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் போடியைச் சேர்ந்த சக்தி குமார்(28) என்பவர் அந்த துணிக்கடைக்கு வந்து வினோத்குமாரிடம்,  நாம் இருவரும் வீர பாண்டியில் செயல்படும் தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் என்று அறிமுகமாகி உள்ளார். அதனைத் தொடர்ந்து தனது உறவினர்கள் சென்னை தலைமை செயலகத்தில் உயர் பதவியில் இருந்து வருவதாகவும் மேலும் முக்கிய அரசியல்புள்ளிகள் தனக்கு பழக்கம் என்றும் வினோத்குமாரிடம் கூறியுள்ளார்.  அலுவலக உதவியாளர் பணிக்கு என ஐந்து லட்சம் பெற்றுக்கொண்டு உறவினர்கள் யாருக்கும் அரசு வேலை வேண்டும் என்றாலும் தான் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியதன் அடிப்படையில் தனது உறவினர்கள் ஐந்து நபர்களுக்கு வேலை வேண்டும்  என கூடுதலாக 25 லட்சம் கொடுத்துள் ளார். பணத்தை கொடுத்து பின்பு ,தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் குமார், சக்திகுமார் 11 நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 46 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து தேனி  குற்றப்பிரிவு போலீசாரிடம் வினோத்குமார்  புகார் அளித்தார். அதனடிப்படையில் குற்றப் பிரிவு காவல்துறையினர் சக்தி குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.