கால்கோள் விழா மதுரை, ஜன.6- உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17 ஆம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக கால்கோள் ஊன்றும் நிகழ்ச்சி ஜனவரி 6 வெள்ளியன்று காலை நடைபெற்றது. வணிகவரி -பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்ட மன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், மற்றும் அரசு அலுவலர்கள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் கால்கோள் நடும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17 ஆம் தேதி அரசு வழிகாட்டுதல்படி சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் இளைஞர் நலன் -விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பரிசு பொருட்களை வழங்குவார்.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் வீரர்களுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கு கார் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக இரு சக்கர வாகனம் வழங்கப்படும். விலையுயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நட வடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டு மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி,மாவட்ட எஸ்.பி.சிவபிர சாத், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ்,துணை தலைவர் சுவாமிநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலாண் பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.