மதுரை, மார்ச் 29- தமிழக சிறைத்துறை சார்பில் அனைத்து மத்தியச் சிறைகள் மற்றும் மாவட்ட, கிளைச்சிறைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, நூலகத்துக்காக பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மத்தியச் சிறையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் நூல்கள் இலக்காகக் கொண்டு நூல்கள் நன்கொடையாக பெறப்படுகின்றன. இதில் மதுரை மத்தியச் சிறை நூலகத்துக்கு பொதுமக்கள், மாணவ, மாணவியர், கல்வி நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நூல்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மதுரை மத்தியச் சிறை நூலகத்துக்கு ஆயிரம் நூல்களை நன்கொடையாக புதனன்று வழங்கினார். இதற்காக மதுரை மத்தியச் சிறைக்கு சென்ற விஜய்சேதுபதி, மதுரை சிறைத்துறை துணைத் தலைவர் பழனியிடம் நூல்களை நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியின்போது, மத்திய சிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் உடனிருந்தார்.