districts

img

ஆறாத ரணங்கள்: உழைப்பும் - பிழைப்பும் கரையிலே...!

நாகப்பட்டினம், டிச.26 - ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு நாகப்பட்டினம் கடற்கரையோர கிராமங்களில் 17 ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நடைபெற்றது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர் 2004 டிசம்பர் 26 இல் நிகழ்ந்தது. உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன தினம் அது. இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு 9.1 என்ற அளவில் ஏற்பட்டு எழுந்த பேரலைகளால் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. ‘சுனாமி’ என அழைக்கப்படும் ஆழிப்பேரலை தாக்குதலில் அரசின் தகவல்களின் அடிப்படையில் 2,27,000 பேர் உயிரிழந்தனர். 20,00,000 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. பல ஆண்டுகள் கடந்த நிலையில், சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கிறது. தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் குறிப்பாக, நாகை மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடற்கரையோர கிராமங்களான அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நம்பியார் நகர், செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரையோர மீனவ கிராமங்கள் அனைத்தும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.

கடலூர், சென்னை போன்ற பல கடற்கரை மாவட்டங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மக்களின் உயிர்ச்சேதம் மட்டுமல்லாது பொருட்சேதமும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியது. வாழ்வாதாரம் அனைத்துமே முடங்கிப் போனது மக்கள் இந்த கடுமையான சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அப்படி வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் கடலை நம்பி வாழ்ந்த, அந்த மக்களின் உள்ளத்தில் ஆறாத ரணமாக நிலைபெற்றுவிட்டது.  உலகம் முழுவதிலும் இருந்து உதவிக் கரங்கள் நீட்டி மீளாத் துயரில் இருந்து மீட்டெடுத்தனர். ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் என நல்லுள்ளம் கொண்ட அனைவருமே அம்மக்களின் புனரமைப்பு வாழ்விற்கு உதவி செய்தனர். அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் கிடைக்கப் பெற்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொரு கிராமமாக தத்தெடுத்து கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்தனர். மீனவ மக்களின் வாழ்வாதாரமான, படகு, வலை போன்ற இன்னும் பிற உதவிகள் கிடைக்கப் பெற்றன.  

கடற்கரை ஓரத்தில் வசித்த மக்களை மீள்குடியேற்றம் செய்து, இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் வாழ்வாதாரமோ இன்னமும் கடற்கரையோரத்தில் இருக்கிறது. காலம் காலமாக கடற்கரையோரத்தில் பிழைப்பு நடத்தி வந்த மக்களை கடலை விட்டு பிரித்து வைத்தாலும், உழைப்பும் - பிழைப்பும் கரையிலேயே இருக்கிறது.

நாகப்பட்டினம் 

ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள, ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூணில், மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யத்தை அடுத்த ஆறுக்காட்டுத்துறையில் கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெகதாப்பட்டினம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஜெகதாப்பட்டினத்தில் ஞாயிறன்று விசைப்படகு மீனவர்கள் சுனாமி பேரழிவு 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஊர்வலமாக சென்று கடலில் பாலை ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மீனவ சங்க தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் மோகன், பொருளாளர் செல்லத்துரை, கணக்கப்பிள்ளை மோகன், நடேசன் நாட்டார், ஜெய்சிங், வஉசி இயக்கம் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.