districts

பேருந்து, வாய்க்கால் வசதி கோரி வெள்ளுவாடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், டிச.23-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெள்ளுவாடி பகுதியில் பேருந்து, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை வலியுறுத்தி வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருமாள் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் சுப்ரமணி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ஆர்.கோகுலகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்திவேல் ஆகியோர் விளக்கிப் பேசினர். கிளை செயலாளர் ஆர்.வெங்கடேசன் நன்றி கூறினார்.  வெள்ளுவாடியில் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை உடனே சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெள்ளுவாடிக்கு உரிய பேருந்து வசதிகள் இல்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரதி நகர் வடக்கு, தெற்கு ஆகிய இரு தெருக்களுக்கு சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தரவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.