புதுச்சேரி, நவ. 14- புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாஸ்கர். இவர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாய முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார். மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலையில்லா விதைகள் வழங்கி வருகிறார். இந்நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமணி, சம்பா நெல் ரகத்தை இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார். அந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.