districts

பொதுச் சொத்துகளை கபளீகரம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி, ஜூன் 26- புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களை யாரேனும் கபளீகரம் செய்தால் கடும் விளைவு களை சந்திக்க நேரிடும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை செய்த பா.ஜனதா அதே முறையை மகாராஷ்டிராவில் செய்கிறது. சிவசேனா கட்சியானது, கட்சி மாறிகளை ஓடஓட விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளது.கட்சி மாறி களால்தான் இந்திய அரசியல் தூய்மை இழந்துள்ளது. கடந்த ஓராண்டில் 35 மத்திய மந்திரி புதுவைக்கு வந்துள்ளார்கள். அவர்களால் புதுவைக்கு ஒரு பைசா கொண்டு வர முடிந்ததா? குடுகுடுப்பைக் காரன் போல் புதுவைக்கு நல்ல காலம் பிறப்பதாக ஆளுநர் கூறுகிறார். எங்கே நல்ல காலம் வருகிறது. நான் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 10 சதவீதம் நிதியை பெற்றேன். ஆனால், ரங்கசாமியால் கூடுதலாக 1.56 சதவீதம் நிதிதான் பெற முடிந்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் சீர்கெட்ட நிர்வாகம் நடக்கிறது. ஜிப்மரை கவனிக்காத மத்திய அரசால் புதுவையில் எப்படி வளர்ச்சியை கொண்டுவர முடியும். கிரண்பேடி காலத்தில் மூடப்பட்ட மதுக்  கடைகளை திறக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது. புதுவையில் நிலம் சம்பந்தமான பிரச்னைகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு.

பட்டா மாற்றும் அதிகாரம், நிலத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம், உபரி நிலத்தை நில உரிமையாளரிடம் பெற்று ஏழைகளுக்கு கொடுக்கும் அதிகாரம், பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பவருக்கு அந்த சொத்தை அவருக்கு உரிமைப்படுத்தி கொடுக்கும் அதிகாரம் என்று 4 சட்டங்கள் அமலில் உள்ளன. புது வையில் பொது சொத்துக்கள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த தக வலின்படி பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு ஆளுநருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலம் மற்றும் பொதுத்துறை சொத்துகளை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது. முதலமைச்சர் தனது அதிகாரத்தை ஆளுநரிடம் விட்டுக் கொடுத்து விட்டார். ஆளுநர் சூப்பர் முதலமைச்சராகவும், ரங்கசாமி டம்மி முதலமைச்சராகவும் இருப்பதாக நான் கூறியது நிரூபணமாகியுள்ளது. புதுவையில் ஒரு இன்ச் நிலத்தைக் கூட தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம், எதிர்த்து போராடுவோம். புதுவை மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத்தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.