புதுச்சேரி, ஜூலை 15- கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி பொறி யியல் கல்லூரி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பாகூர் கொம்யூன் கிருமாம் பாக்கம், ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தொழிலாளர் சமரச அதிகாரி முன்பு செய்து கொண்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். பண்டிகை கால உதவித்தொகை மற்றும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டிய ஈமச்சடங்கு நிதி ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், தலைவர் பிரபுராஜ், பொதுச்செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் கலியன், தினேஷ், கந்தன், அமுதா, மின்னலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.