புதுக்கோட்டை, ஜூலை 16 -
ஆலங்குடி, திருமயம் பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், துளையனூர் கிராமத்தில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் மற்றும் ஆலங்குடி பேரூராட்சி, கீழாத்தூர் கிராமத்தில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், மண்டல இணை இயக்குநர் (கல்லூரிகள்) பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.