அறந்தாங்கி, ஜூலை 22 - புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய மின் விசை பம்ப் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டு பொதுமக்களின் குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டது. மேலும் புதுக்கோட்டை - ஏம்பல் சாலை சுள்ளாம்பட்டி வரை நபார்டு திட்டத்தின் கீழ் 1800 மீட்டர் நீளம் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பள்ளிக்கு தேவையான கலையரங்கம், மிதிவண்டி, நிழற்குடை உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றி தரப்படும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அரிமளம் ஒன்றிய குழுத் தலைவர் மேகலாமுத்து, அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணு முத்துக்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.