நாமக்கல், நவ.27- பள்ளிபாளையம் அருகே காட்சிப்பொருளாக காணப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள நாட்டாக்கவுண்டன் புதூர் பகுதியில், கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு மத்திய நிதிக்குழு திட்டத்தின் மூலம், ரூ.25 லட்சம் மதிப் பீட்டில் நகர் நல மையம் சார்பில் கட்டப்பட்ட, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். முதல்வர் திறந்து வைத்த ஆரம்ப சுகாதார நிலையம் சிறிது நாட்கள் மட்டுமே செயல்பட்டது.
அதன்பின் தற்போது வரை இந்த சுகாதார நிலையம், மருத்துவர்கள் சரிவர வராத காரணத்தால் திறக்கப்படாமல் போனது. தற்போது மருத்துவமனையைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால், மருத்துவமனை பகுதியை மது அருந்தும் இடமாக சமூக விரோதிகள் மாற்றிவிட்டனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தற்பொழுது மழைக்காலம் தொடங்கி விட்டதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், வயதானவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, காட்சிப்பொருளாக உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லையென்றால் பெரும் போராட்டம் நடைபெறும், என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.