districts

img

அய்யா வைகுண்டர் ‘சனாதனக் காவலர்’ அல்ல; வரலாறு தெரியாவிட்டால் வாய் திறக்கக் கூடாது

அய்யா வழியினருக்கு பூசை புனஸ்காரம் இல்லை. 
கோயில் இல்லை (பதி, தாங்கல்களே உள்ளன). குரு பூசை இல்லை. உருவ வழிபாடு இல்லை. படையல் இல்லை. பலி பாவம் இல்லை. பூ போட்டு போற்றுவித்தல் இல்லை. ஓமம் வளர்த்தல் இல்லை. சாதி நிலைப்பாடு இல்லை. மொழி பேதம் இல்லை. ஆண்-பெண் பேதம் கூட இல்லை.

நாகர்கோவில், மார்ச் 5- அய்யா வைகுண்டரின் 192 ஆம்  அவதார தினத்தில், ஆளுநர் மாளிகையில், ‘சனாதன வரலாறு’ என்கிற நூலை வெளி யிட்டு, அய்யா வைகுண்டர் சனாதனம் காக்க வந்தவர் என்று ஆளுநர் பேசிய தற்கு பூஜிதகுரு பால பிரஜாபதி அடி களார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் சுவாமி தோப்பில் அய்யா வைகுண்டர் தலைமைப்பதியி்ல் உள்ள அன்புவனத்தில் செவ்வாயன்று (மார்ச் 5) செய்தியாளர்களுக்கு இது தொடர்பாக பேட்டியளித்தார்.

பின்னர் தீக்கதிருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது:

அய்யா வைகுண்டரைப்பற்றி இன்று  உலகம் பேசுவது பெருமைக்குரியது தான். அய்யா வைகுண்டரை கவுரவப்படுத்து வதாக கூறி ஒரு புத்தகத்தை ஆளுநர் வெளி யிட்டுள்ளார். அய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அவர் அய்யாவுடன் தொடர்பில்லாத இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகளைப் பற்றி நிறைய பேசியது இன்று பத்திரிகைகளில் வந்திருக்கிறது. ஆளுநரின் பேச்சு மிகுந்த மன வருத்தம் அளிப்பதாக உள்ளது.

போர்க்குரல் கொடுத்தவர்
அய்யா வைகுண்டர் மநு (அ) தர்ம த்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். அதுபோல சமத்துவ சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். ‘உண்டான சாதி ஒக்க ஒரு இனம் போல வாழணும்’ என்று  சொன்னார். மநு (அ) தர்மத்தை ஏற்றுக் கொண்ட அரசுதான் அன்று அய்யாவை கொடுமைப்படுத்தியது;  சிறைப்படுத்தி யது. 200 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றை சரியாகப் பேச வேண்டும். நானாக இருந்தாலும் பேசுவதில் ஒரு வரலாற்று உண்மை பொதிந்திருந்தால் அது வெளிப்படுத்தப்பட வேண்டும். வரலாறு தெரியாவிட்டால் அதுபற்றி வாய் திறக்கக் கூடாது.

அய்யாவை ஏற்றுக்கொண்டு அவர் வழியை பின்பற்றி வாழும் மக்களுக்கு அய்யா கூறினார், அய்யா வழி மக்கள் என்று சொல்கிறவர்களுக்கு பூசை புனஸ்காரம் இல்லை. கோயில் இல்லை (பதி, தாங்கல்களே உள்ளன), குரு பூசை இல்லை. உருவ வழிபாடு இல்லை. படையல் இல்லை. பலி பாவம் இல்லை. பூ போட்டு போற்றுவித்தல் இல்லை. ஓமம் வளர்த்தல் இல்லை. சாதி நிலைப்பாடு இல்லை. மொழி பேதம் இல்லை. ஆண் பெண் பேதம்கூட இல்லை. பெண்களும் ஆன்மீகப் பணியாற்றலாம் என்பது அய்யாவின் கோட்பாடு.

காக்க வரவில்லை; நீக்க வந்தார்
இந்த கோட்பாடுகளைக் கொண்டு வந்த அய்யாவை நாராயணரின் அவதார மாக பார்ப்பதால் சனாதனத்தை காக்க வந்த வர் என்று சொல்லக்கூடாது. அவர் சனா தனத்தை காக்க வரவில்லை. மக்களைக் காக்க வந்தார். மக்களிடம் இருந்த மடமை யை – அறியாமையைப் போக்க வந்தார். மனுதர்மம், சதுர்வர்ணம் என்கிற சாதியப் பொல்லாங்கை நீக்குவதற்குத் தான் அய்யா வந்தார். ‘அகிலத்திரட்டு அம்ம னை’யைப் படித்துவிட்டுப் பேசவேண்டும். புராண வேத ஆகம நூல் சாரமும் கெட்டுப் போச்சு, புராணங்கள் புகுத்தப்பட்டி ருக்கிறது என்று வைகுண்டசாமி சொல்கிறார். “எல்லா புராணங்களிலும் வரலாறு திணிக்கப்பட்டிருக்கிறது; எனவே, அவையெல்லாம் பொய்சூடிப்போனது; எனவே, அதை நம்பி இருக்காதீர்கள். ஒரு புதிய சகாப்தத்துக்கு வாருங்கள்” என்று கண்ணாடி வழிபாட்டை முன்னி றுத்தினார். அவரவர் தாய் மொழியில் வழிபடுங்கள் என்றார்.

அதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர்
அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். எங்களது வேலையை ஆளுநர் எடுத்துக்கொள்ளக்கூடாது. வழித்தேங்காய் எடுத்து பிள்ளை யாருக்கு உடைப்பதுபோல் செய்யக் கூடாது. உயர்ந்த அதிகாரத்தில் இருப்பதால் அதை செய்யக் கூடாது. அதிகாரத்தை அரசன் செலுத்திய போது அதை எதிர்த்துப்  போராடியவர் அய்யா வைகுண்டசாமி. கேட்டவர் வைகுண்டசாமி. மனிதர்களுக் குள் சமத்துவத்தையும் சகோதரத்தையும் சமூக நீதியையும் கேட்டவர் அவர். ‘கொத்தைக் குறைக்காதே குறை மரக்கால் வைக்காதே! தாழக்கிடப்போரை தற்காப் பதே தர்மம்’ என்று முழங்கிய அய்யாவின் பெருமையை பேசியிருக்கலாமே!

சனாதனம் என்கிற மதத்திற்காக, அந்த மதத்தில் இருக்கும் சாதி மநுதர்மம்,  நால்வர்ணம் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? ராமன் நாராயணனின் அவதாரம். ராமன் சமத்துவத்தை பேசி னான். இன்று சாதியத்தால் ராமனை முடக்கி வைத்திருக்கிறார்கள். கல்லாக இருக்கும் ராமனை நம்மைப்போன்று இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள மக்களால் கருவறைக்குள் சென்று தொட முடியுமா? இந்த நிலை நீங்கள் சொல்லும் மநுதர்மம் சதுர் வர்ணத்தால் வந்ததுதானே.  வைகுண்டர் சொல்லியிருக்கிறார், உன்னி லும் என்னிலும் காண முடியாத கடவுளை நீ கல்லிலும் மண்ணிலும் காண முடியாது என்று. எனவே கண்ணாடியில் காணும் ஒவ்வொருவரும் கடவுளே. சிவனையும், திருமாலையும், காளியையும் அந்த வடிவில்தான் காண வேண்டும்.

சாதியத்திற்கு எதிராக சண்டமாருதம் செய்தவர்
சாதியின் தோற்றத்தைப்பற்றி கூறிய அய்யா, சாதி பதினெட்டாய் வகுத்தான்  நீசன் என்றார். அப்படி சொன்ன வை குண்டரை சனாதனத்தை காப்பாற்றப் பிறந்தார், மதமாற்றத்தை தடுக்க வந்தவர் என்பது சரியல்ல. 

‘மதமாற்றம் ஏன் வந்தது? பெண்கள் தோள்சீலை போடக்கூடாது என்று மரியாதைக் குறைவாக நடத்தியதால் குப்பாயம் போடலாம் என மதம் மாறினார் கள். சபை ஏறக்கூடாது; தெருவுக்குள் நாய், நரி, பன்றி போகலாம்; நாடார், ஈழவர் இன்ன பல சமூகத்தினர் தெருவில்  போகக் கூடாது என்றார்கள். எங்கிருந்தும் வந்தவர்கள் அல்ல அவர்கள். சொந்த மண்ணுக்குள் இத்தகு கொடுமை களை வந்தேறிகளால் அனுபவித்தார்கள். சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கி கோயில்களை எல்லாம் தமதாக்கி னார்கள். அந்த கொடூரத்தை மாற்றவே வைகுண்டர் வந்தார்.

அய்யாவை இங்கிருந்து அடித்து துன்புறுத்தி திருவிதாங்கூர் அரசன் இழுத்துச் சென்ற திருவனந்தபுரம் சாலைக்கு ‘அய்யா வைகுண்டர் தேசிய  நெடுஞ்சாலை’ என பெயரைச் சூட்டு மாறு கேட்கிறோம். குருநானக் போன்று வட புலத்தில் பல மகான்களின் பெயர்களில்  சாலைகள் உள்ளன. அய்யா ரத்தம் சிந்திய சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட லாம். ஒரு பல்கலைக் கழகத்துக்கு அவரது பெயரைச் சூட்டலாம். அதையெல்லாம் செய்யாமல் அய்யாவை தனதாக்கி பட்டா போட்டுக்கொள்ளும் வேலையை ஆளுநர் அல்ல; யார் செய்தாலும் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.

- தொகுப்பு : சி.முருகேசன்