நாகர்கோவில், ஜூலை 18-கன்னியாகுமரி மாவட்டம் சுருள கோடு ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பிலா வடி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் புதிதாக அமையவுள்ள முல்லை பூங்காவிற்கான இடத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், ஐவகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றான காடும் காடு சார்ந்த இடம் முல்லை. இந்நிலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வியல், புவியியல் நிலைகளை எடுத்துக் காட்டும் விதமாக முல்லைப் பூங்கா அமைய உள்ளது. கன்னியாகுமரி மாவட் டம் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட வேளி மலை கிராமத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் இப்பூங்கா அமைய உள்ளது. இதற்கு 2024-25 ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பிலாவடி அருகில் முல்லைப் பூங்கா அமைக்கப் படவுள்ளது. இப்பூங்காவில் முல்லை திணை தொடர்பான சிற்பங்கள் (ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர், ஏறு தழுவுதல், மாயோன்), விலங்குகள் & பறவைகளின் சிற்பங்கள் (கருடன், காட்டுக்கோழி, முயல், மான், யானை, புலி, பசு, ஆடு, சேவல், கானக்கோழி), முல்லை திணை சங்கீத கருவிகள் (முல்லை யாழ், புல்லாங்குழல், பறை), முல்லை திணை நாகரிகம் தொடர்பான சிற்பங்கள் (ஆநிரை மேய்த்தல், களை எடுத்தல், குழலு தல், ஏறு தழுவுதல், கூத்தாடல், மந்தை மேய்த்தல்), அமைக்கப்பட உள்ளன.
காட்சி பலகைகள் (குற்றால குற வஞ்சி பாடல், முல்லைப்பாட்டு, நற்றி ணை, புறநானூறு பாடல், ஆலோளம் பாடல்), மரவகை சேகரம் (வாழை, மா, பலா, கொய்யா, மங்குஸ்தான், ரம்புட்டான், ஜாதி, கிராம்பு, துரியன், கமுகு, கொன்றை), முல்லை திணை சிறுதானிய சாகுபடி (சாமை, வரகு, கேழ்வரகு), முல்லை திணை மலர்கள் சாகுபடி (முல்லை, பிச்சி, குண்டு மல்லி), குழந்தைகள் விளையாட்டு திடல், நிழல் கூடாரம், பாறை தோட்டம், மரப்பாலம், நீரோடை போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் அமைய உள்ளன.
மேலும் மலை ஏற்றம், இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலைக்கு உகந்த பாரம்பரிய மர வகைகள் நடவு செய்தல், ஏற்கனவே இருக்கின்ற மர வகைகளை பாது காத்து எதிர்கால சந்ததியினர் பயன் பெறும் வகையிலும் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கல்குளம் வட்டாட்சியர் முருகன், சுருளகோடு ஊராட்சிமன்ற தலைவர் விமலா சுரேஷ் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.