எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளச் சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றன. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி நகரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், நாகப்பட்டினம் டாடா நகரைச் சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையைச் சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்காலைச் சேர்ந்த இரும்பன், பாபு, பரசுராமன், முருகன், சுந்தரவேல், வடிவேல் உள்ளிட்ட 15 பேர் விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேரைக் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தமிழக மீனவர்களை காங்கேசன் நகர் கடற்கரை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்வபம் குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.