districts

img

தூத்துக்குடி மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் மக்களவையில் கனிமொழி எம்.பி கோரிக்கை

தூத்துக்குடி, ஆக.6 - இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்தார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி செவ்வாயன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பேசியதாவது: 

“இந்த ஆண்டு மட்டுமே தமிழக மீனவர்களின் 27 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. சுமார் 177 இந்தியப் படகுகள் இப்போது இலங்கை அரசிடம் இருக்கின்றன. அந்த படகுகள் தேசிய மயமாக்க ப்பட்டிருக்கின்றன.

‘அந்தப் படகுகள் அவர்களுடையது’ என உரிமை கொண்டாடப்படுகின்றன. அந்தப் படகுகள் இந்திய மீனவர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, படகுகள் விடுவிக்கப்படவில்லை. தூத்துக்குடி தருவைகுளத்தில் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு திங்களன்று இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்த பிறகும் இது நடந்திருக்கிறது. எனவே, இந்த பிரச்சனைகளால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் பேசினார்.