தூத்துக்குடி,பிப்.25- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு ரூபாய்கூட வெள்ள நிவாரண நிதி ஒன்றிய பாஜக அரசு கொடுக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிப்ரவரி 25 ஞாயிறன்று நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனைப் பட்டா, படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
2024 ஆம் ஆண்டுக்கான முதல் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் இருந்து மகிழ்ச்சியோடு தொடங்குகிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் பல அமைச்சர்கள் இங்கே தங்கியிருந்து உடைந்த பாலங்களை எல்லாம் சரிசெய்துவிட்டுத்தான் சென்னை திரும்பினார். இவ்வாறு உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் 288 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் ரூ.66 கோடியே 48 லட்சம் மதிப்பில் தற்காலிக சீரமைப்புகள் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது. மேலும் இந்த உடைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய, 145 கோடியே 58 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதே மாதிரி திருநெல்வேலி மாவட்டத்திலும் 802 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள், 27 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது. நிரந்தரமாக சரிசெய்ய 15 கோடியே 93 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பெரிய நிறுவனங்கள்
இங்குள்ள இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் சிறந்த கம்பெனிகளில் பணி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல பெரிய நிறுனங்களை இந்தப் பகுதிகளில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இங்குள்ள சில்லாநத்தம் கிராமத்தில், ரூ.4000 கோடியில் மிகப்பெரிய கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்த நிறுவனம் தூத்துக்குடியில் மொத்தம் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கிறது.
திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், டாடா பவர் நிறுவனம் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த 1800 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்கவுள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த தொழிற்சாலைகள் உருவாகும்போது ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நிவாரண உதவிகள்
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 58 நபர்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்த ஆடு,மாடு, கோழி உரிமையாளர்களுக்கு 34.74 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 வீதம், 382.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,000 வீதம் 35.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் பாதிப்படைந்த வீடுகளுக்கு 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 9.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகள் பழுதுபார்த்தல், பயிர்சேத நிவாரணம், சிறு வணிகர்களுக்கு சிறப்பு கடன் திட்டம், தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவித் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு கடன், மீன்பிடி படகுகளுக்கான நிவாரணம், கால்நடைகள் வாங்க கடன், உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.3000 வீதம் நிவாரணம், பழுதடைந்த வாகனங்களுக்கு காப்பீடு ஆகியவை வழங்கப்படும் என்று நான் அறிவித்தேன். இதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை அனைத்துக்கும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. அதுதான் முக்கியம். ஒன்றிய அரசு ஒரு ரூபாய்கூட கொடுக்காதபோதும், இவை அனைத்தும் இந்த ஸ்டாலின் உங்களுக்காக கொடுத்தது. இந்த அரசு உங்களுக்காக கொடுத்தது.இவ்வாறு முதல்வர் பேசினார்.