மன்னார்குடி, மார்ச் 19 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் இதயத்தை செயல்படுத்தும் அவசரக் கருவி வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட ஆட்சியர், மீனாட்சி மருத்துவமனை இணைந்து உயிர்காக்கும் கருவியை (ஆட்டோமேட்டிக் எக்ஸ்டெர்னல் டிபிப்ரிலேட்டர்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தியுள்ளனர். பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் அவசர காலச் சூழலில் இதயம் செயலிழக்கும்போது உயிர் காக்கும் பொருட்டு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் அ.சரவணவேல் கருவியின் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார். மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் மருத்துவர் பாலமுருகன், ஊக்கப் பயிற்சி மற்றும் உளவியல் நிபுணர் சுபாஷ்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.