districts

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை திட்டம் அறிவிப்பு

திருவாரூர், பிப்.8 - திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், நெல் பயிருக்கு அடுத்த படியாக உளுந்து, பச்சைப்பயிறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது.  தென்னை ஏறத்தாழ 5850 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் பெரும் அளவில் பயிரிடப்பட்டுள்ளன. எனவே விலை ஆதரவு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நெல் கொள்முதல் நடைபெறுவது போல், தற்போது டெல்டா மாவட்டங்களிலும் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு  நிறுவனத்தின் மூலமாக மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும் பணி திருவாரூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பிப்.2 முதல் ஜூலை 31 வரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலமாக அரவைக் கொப்பரை 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என கொள்முதல் செய்யப்படவுள்ளது.  கொள்முதலுக்கு கொண்டு வரப்படும் அரவைக் கொப்பரை ஈரப்பதம் 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என விற்பனைக் குழு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து தங்களது அரவைக் கொப்பரையை விற்பனை செய்யலாம். இதற்கான பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலர்களான விற்பனைக் கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் - 90471 55282,    இளநிலை உதவியாளர் - ரஜனிகாந்த் - 9751382820, வேளாண்மை உதவி அலுவலர் (வேளாண் வணிகம்) அனு -  96294 27520 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.