திருவாரூர், ஜூன் 3 - தமிழக அரசு மாணவ, மாணவியர்கள் கல்வி திறனையும் விளையாட்டுத் திறனையும் ஊக்குவிக்க பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வந்ததில், தமிழக அரசானது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த உணவு வகைகளில் மாற்றம் செய்து, மாணவர்களுக்கு புதிய வகை உணவு வழங்க உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் வட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு புதிய வகை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.