திருவாரூர், பிப்.20 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி மேட்டுப் பாளையம் - நாலாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயத் தொழிலாளி கணேசன். இவரது மகள் சுதா தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய நேர்முகத் தேர்வில் வென்று நீதிபதி ஆனார்.
சுதா நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று நேரடியாக நீதிபதியானதை பாராட்டி திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நீதிபதி சுதா பேசுகையில், நான் அரசுப் பள்ளியில் படித்து பின்னர் திருவாரூர் திரு.வி.க அறிவியல் கலைக் கல்லூரியில் இளங்கலை பயின்றேன். தொடர்ந்து திருநெல்வேலி கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்து, திருத்துறைப்பூண்டியில் பயிற்சி வழக்கறிஞராக செயல்பட்டேன். இந்நிலையில் அங்கு பணிபுரியும் வழக்கறிஞர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணைய நடத்தும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க ஊக்கமளித்தனர்.
இதனடிப்படையில் எனது அப்பா, அம்மாவின் ஆதரவுடன், விடா முயற்சியுடன் படித்தேன். இதன் பயனாக முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெற்று, தற்போது நேர்முகத் தேர்வில் வென்று நேரடியாக நீதிபதி பதவிக்கு தேர்வாகியுள்ளேன். இதற்கு முழு காரணம் எனது பயிற்சி வழக்கறிஞர் மற்றும் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள்தான்” என்றார். சுதா நீதிபதியானதை முன்னிட்டு, நாலாநால்லூர் கிராம மக்கள் அவரது இல்லத்திற்கு வந்து பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.