districts

சிலைத்திருட்டு வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

கும்பகோணம், ஏப்.1 - திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே சிலைத்திருட்டு வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி வியாழனன்று கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல் நிலையத்துக்குட்பட்ட பூங்குடிமூலை கிராமத்தில், வரசித்தி விநாயகர் கோயிலில் ஒன்றரை அடி உயரம் கொண்ட உலோக விநாயகர் சிலை 2016 ஆம் ஆண்டு திருட்டு போனது. இதுதொடர்பாக எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த சிலை திருட்டு சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த அகிலன் (எ) தங்கவேல் (25) என்பவர் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.  இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், சிலைதிருட்டு வழக்குகளின் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யும்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த்முரளி, காவல்துறை தலைவர் தினகரன் ஆகியோரது உத்தரவுப்படி, கும்பகோணம் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்நிலையில் வியாழனன்று தங்கவேலு பேரளம் அருகிலுள்ள கொல்லுமாங்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் அங்கு விரைந்த காவல் ஆய்வாளர் இந்திரா, காவல் உதவி ஆய்வாளர் பாலச்சந்திரன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட தங்கவேல் மேலும் ஒரு சிலைதிருட்டு வழக்கில் தொடர்புடையவராவார். கைது செய்யப்பட்ட தங்கவேல், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.