திருவள்ளூர்,டிச.24- திருவாலங்காடு அருகே அதிவிரைவு ரயில் இன்ஜினின் மேல் உள்ள பண்டோ கிராப் உடைந்து ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சனிக்கிழமையன்று (டிச 24 ) சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் இன்ஜினின் உயர் மின் அழுத்த கம்பி இணைப்பின் உராய்வை பயன்படுத்தும் பண்டோ கிராப் என்கின்ற பாகம் உடைந்ததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயில், சென்னையிலிருந்து, பெங்களூர் செல்லும் லால்பார்க் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடைந்துள்ள ரயில் பாகத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.