districts

img

வெம்பேடு கிராமத்தில் இருளர் மக்களும் பட்டா கிடைத்ததும் பயனில்லை மலைவாழ் மக்கள் வருத்தம்

திருவள்ளூர், ஜூன் 29- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் அமைந்துள்ளது வெம்பேடு இருளர் காலனி.  இதில் பல தலைமுறைகளாக 46 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் இன்றி அம்மக்கள் சுகாதாரமற்ற குட்டை தண்ணீரை பருகி வந்தனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தனியாக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளனர்.

வெம்பேடு பகுதியில் வாழும் இருளர் இன மக்களுக்கு அங்கேயே குடிமனை பட்டா வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர். அதே ஊராட்சியில் மாற்று இடமாக உள்ள குருபுரம் பகுதியில் 35 குடும்பங்களுக்கு குடிமனை பட்டாவை கடந்த ஆண்டு ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வழங்கினார். இந்த நிலையில் கடந்த 2023 ல் வந்த மிக்ஜாம் புயலால் வெம்பேட்டில் சகுந்தலா, தங்கம், எஸ்.தேவி,  வசந்தா, அங்கம்மாள், அமுலு, எம்.தேவி ஆகிய 7 குடிசை வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது என அதிகாரிகள் கணக்கெடுப்பின் போது தெரியவந்தது.

மேலும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  தொடர் போராட்டத்தையடுத்து  தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை கடந்த வாரம்  பயனாளர்களிடம் பூண்டி பிடிஒ கொடுத்தார். வீட்டு மனைகளுக்காக நிலம் ஒதுக்கீடு செய்து ஓராண்டு ஆகியும், இன்னும் நிலத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் காடுகளாக புதர்கள் மண்டி கிடக்கிறது.  

செஞ்சிபனம்பாக்கத்தில்  2 குடும்பங்களுக்கு மட்டும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அங்கேயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலத்தினை அளவீடு செய்து தரவில்லை. இதனால் தொகுப்பு வீடுகள் கட்ட முடியவில்லை.  மெய்யூர் ஊராட்சியில் உள்ள வெம்பேடு இருளர் காலனியில் புயலால் பாதிக்கப்பட்டு, பாழடைந்த குடிசையில் தான், தங்கம் என்ற பெண்மணி இன்றும் வாழ்ந்து வருகிறார்.  

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவிக்கையில்,  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகியும், இருளர் இன மக்களுக்கு என  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலத்தினை அளவீடு செய்து கொடுக்காததால், தொகுப்பு வீடுகளை கட்ட முடியாத நிலையில் உள்ளனர். வருவாய்த் துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மெத்தன போக்கால் திருவள்ளூர் மாவட்டத்தில் இருளர் இன மக்கள் குடிமனை பட்டா கிடைத்ததும் பயன்பெறமுடியாமல் உள்ளனர்.  

பணி ஆணைகள் வழங்கியும் தொகுப்பு வீடுகள் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்தும், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். அடுத்த புயல், மழை வெள்ளம் வருவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.