districts

பொய் புகார் கொடுத்தவருக்கு காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர், ஜன. 23- திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூர், பல்லவன் திரு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (37). இவர் வீட்டில் கடந்த 17 ஆம் தேதி பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில்  ஈடுபட்டிருந்த நபர்கள் உரிமையாளர்கள் வந்தவுடன்  இருசக்கர வாகனத்தில்  தப்பி சென்றனர். இது குறித்து ராஜேஷ்,  மணவாளநகர் காவல் நிலையத்தில் தனது வீட்டில் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் ஒரு சவரன் தங்க  நகையை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக புகார்  அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.  திருடர்கள் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து தப்பித்து உள்ளாடையுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும் காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்திய  இருசக்கர வாகனத்தின் பதிவு  எண் கொண்டு இருப்பிடத்தைக் கண்டு பிடித்த காவல்துறையி னர்,  காசிமேடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (27), திருநின்றவூர் பார்த்திபன் (40) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது கொள்ளையடிப்பதற்காக வீட்டில் சென்றது உண்மைதான் என்றும், அங்கு பணத்தையும் நகையையும் நாங்கள் எடுத்து வைத்தபோது வீட்டின் உரிமையாளர் வந்த தால் பணத்தையும்,  நகையையும் அப்படியே அங்கேயே விட்டு, விட்டு உரிமையாளரை தாக்கி விட்டு  இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், காவல்துறையினர் வீட்டின் உரிமை யாளரை வர வைத்து விசாரணை மேற்கொண்டதில் தங்கள்  வீட்டில் பணம் மற்றும் நகை திருடு போகவில்லை என ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பொய் புகார் கொடுத்தது அம்பலமாகியது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வீட்டின் உரிமையாளரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். பிறகு கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு  கொள்ளையர்களையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் ஏற்கனவே பல்வேறு கொள்ளை   வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது  தெரியவந்தது. அவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம், கத்தி, ரூ. 1300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.