districts

img

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலி

திருவள்ளூர், ஜூன் 17- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த எடமணி கிராமத்தில் வசிப்பவர் சம்பத்.பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறார்.  

வழக்கம்போல் திங்களன்று (ஜூன் 17), காலை எடமணி கிராமத்தில் இருந்து பசியாவரம் மேம்பாலம் வழியாக பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டதில் சம்பத் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த திருப்பாலைவன காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மோதிய வாகனத்தை சிசிடிவி கேமரா பதிவை கொண்டு உடனடியாக  கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பொன்னேரி பழவேற்காடு சாலையில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. பசியாவரம்-பழவேற்காடு இடையே மேம்பால பணிகள் முடிவுராத நிலையில் தொடர்ந்து இதுபோன்று விபத்துக்கள் அப்பகுதியில் நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பழவேற்காட்டில் முக்கிய பகுதிகளில் திருப்பாலைவனம் காவல்துறையினரால் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பழுதாகி உள்ளதால் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.