திருவள்ளூர், ஜூன் 29- எஸ்.வி.ஜி.புரத்தில் ஒதுக்கிய வீட்டு மனைகளை அந்தந்த பயனாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று (ஜூன் 28), ஆர்.கே.பேட்டை வட்டாட் சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு 2000 ஆம் ஆண்டில் எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் சர்வே எண் 112/2, 112/3A ல் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் நிலம் கையகப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை பட்டா வழங்கியது.
அந்த இடம் மலை அடிவாரத் தில் உள்ளதால் மக்கள் சென்று வர வழி இல்லாத நிலையில் உள்ளது. இம்மக்கள் ஏழ்மை காரணமாக வீடு கட்ட முடியாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென ஆர்.கே.பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் தற்போது அந்த இடம் அரசுக்கு சொந்தமானது, அத்து மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் பலகை வைத்துள்ளது. இதனை கேள்விப்பட்ட பயனாளர்கள் அதிர்ச் சியடைந்தனர். தங்களுக்கு ஒதுக்கிய வீட்டு மனையைக் காப்பாற்றிக் கொள்ள, கடன் வாங்கியும் சிலர் நகைகளை அடகு வைத்து சிறிய சிமெண்ட் வீடு கட்டிக் கொண் டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீட்டு வரி ரசீது கேட்டு ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு சென்றால் அரசு பலகை வைத்துள்ளதால் ரசிது வழங்க மறுக்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோரையும் சந்தித்து மனு அளித்துள்ளனர். இருப்பினும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில் சிபிஎம் தலைமையில் வெள்ளியன்று (ஜூன் 28), ஆர்.கே.பேட்டை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மனு கொடுக்கும் இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். இதில் வட்ட செயலாளர் அ.சிவபிரசாத், வட்டக் குழு உறுப்பினர் கே.ஜி.கணேசன் ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் விஜயகுமார் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.